Also Watch
Read this
நீட் மறு தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்றவும் வலியுறுத்தி உள்ளார்.

22.8 லட்சம் மாணவர்கள் தவிப்பு
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
நீட் தேர்வில், அமைப்பு ரீதியான குறைபாடு மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர். இது, முதன் முறையல்ல, 2015ஆம் ஆண்டு, நீட் அறிமுகமாவதற்கு முன் நடத்தப்பட்டு வந்த AIPMT தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு நடந்து, உச்சநீதிமன்றம் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட்டது.

வெளி மாநிலங்களில் தேர்வு மையம்
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற பிரச்சினைகளும் நீட் தேர்வை சர்ச்சைக்குள்ளாக்கியது. பல தேர்வு மையங்களில் சரியான உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப்பள்ளி, தமிழ்வழி பயின்ற, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு இருந்து வருகிறது. தகுதி என்று சொல்லிவிட்டு, பணம் கொழிக்கும் வணிகமாக, பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட பணக்காரர்களுக்கான தேர்வாகவே இது உள்ளது.

மாணவர்களுக்கு மன அழுத்தம்
நீட் தேர்வுக்கு முந்தைய, தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை மாடல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் மிக வலிமையான பொது சுகாதார அமைப்பைத் தமிழ்நாட்டில் கட்டமைத்தது இந்த மாடல் தான். நீட் இதனைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகின்றன.

மாணவர்களின் எதிர்காலம்
2026-27ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை ரத்து செய்து, பள்ளி பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும். தற்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், இதற்காகத் தங்கள் அரசு, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் 14ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123ன்படி, அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும். பிரதமர் எனது இந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, லட்சக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற - பிற்படுத்தப்பட்ட - ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திட வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved