Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 06:44 AM
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்த கையோடு, சென்னை மயிலாப்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என உறுதி ஏற்றார். கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாத கட்சி திமுக என்ற இபிஎஸ், திமுகவை நம்பி 10 ஆண்டுகளாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அடிமைகளாக இருந்து விட்டதாகவும் சாடினார்.

சூடு பிடித்த தேர்தல் களம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடித்துள்ளது. காலையில் 23 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த எடப்பாடி பழனிசாமி, பிற்பகலில் NDA கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து, மயிலாப்பூர் தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் பிரச்சாரத்திற்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, வழிநெடுகிலும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவினர் தேங்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தும், துண்டுகளை தலைக்கு மேல் சுழற்றியும் ஆரவாரமாக வரவேற்பு அளித்தனர்.

அடிமைக் கட்சிகள்
கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாத கட்சி தான் திமுக என்பது தொகுதி பங்கீட்டிலேயே உறுதியாகி இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளை விட புதிதாக வந்த கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், 10 ஆண்டுகளாக திமுகவுக்கு அதன் கூட்டணி கட்சிகள் அடிமையாக இருந்து கொண்டிருப்பதாக விமர்சித்தார். முதன்முதலில் அதிமுக ஆட்சியில் தான் மழைநீர் வடிகால் திட்டம் கொண்டு வரப்பட்டது என்ற எடப்பாடி பழனிசாமி, முதல் இரண்டு கட்ட மழைநீர் வடிகால் திட்டம் சிறப்பாக செயல்படுத்தி முடிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது, நான்காவது கட்ட பணிகளை திமுகவால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என குற்றம் சாட்டினார். மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டது, எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது என முதலமைச்சர், அமைச்சர், மேயர் என அனைவரும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றியதாக சாடினார்.

கிட்னி திருட்டு
2021 தேர்தலின் போது கல்விக் கடன் ரத்து செய்யப்படும், நீட் ரத்து செய்யப்படும் என வித விதமாக சொல்லி மக்களை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் திமுகவினர் என்ற இபிஎஸ், மக்களை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு எந்த நேரமும் குடும்பத்தை பற்றியே சிந்தித்து குடும்பத்திற்காகவே திட்டங்களை தீட்டிக் கொண்டிருப்பது தான் திமுக ஆட்சி என கடுமையாக சாடினார். திமுக எம்.எல்.ஏ.வின் மருத்துவமனையிலேயே கிட்னி திருட்டு நடக்கிறது என்ற எடப்பாடி பழனிசாமி, அந்த மருத்துவமனைக்கு எதிராக ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை என சாடினார். அதோடு, எல்லா இடங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது என்றும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க காரணமே போதைப் பொருள் நடமாட்டம் தான் எனவும் கூறினார்.

மயிலாப்பூர் பாஜக வேட்பாளர்
கடைசியாக, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். உரையை முடித்ததும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் சேர்ந்து மக்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved