Also Watch
Read this
By: Manigandan Raja

பெண்களை தவறாக புகைப்படம் எடுத்தவர் கைது :
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இங்கு வந்து தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று வார விடுமுறை மற்றும் வைகாசி விசாகத் திருவிழாவின் முதல் நாள் என்பதால் திருஆவினன்குடி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு, தரிசன வழியில் நின்றிருந்த பெண் பக்தர்களிடம் வாலிபர் ஒருவர் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தனது அலைபேசி மூலமாகப் பெண் பக்தர்களுக்குத் தெரியாமல் அவர்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் பதிவு செய்துள்ளார். இதனைத் தட்டிகேட்ட சக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த வாலிபரை உடனடியாகப் பிடித்துத் தர்ம அடி கொடுத்து, பின்னர் அவரை பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அடிவாரம் போலீஸார் அந்த வாலிபரின் அலைபேசியைப் பறிமுதல் செய்து சோதனை செய்ததில், அவர் பெண் பக்தர்களை அநாகரிகமான முறையில் ஆபாசமாக
வீடியோ எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் களத்தூரைச் சேர்ந்த குரியன் மகன் இம்மானுவேல் (வயது 35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பெண்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்தல், அலைபேசி வழியாகப் பின்தொடர்ந்து தொல்லை தருதல் மற்றும் இணையவழியில் ஆபாசப் பதிவுகளைப்
பரப்புதல் ஆகிய குற்றங்களுக்காகப் புதிய கடுமையான சட்டப் பிரிவுகளான 77 BNS, 79 BNS மற்றும் 67(A) IT Act ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இம்மானுவேலை கைது செய்து சிறையிலடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved