Also Watch
Read this

ஐபிஎல் 2026 தகுதிச்சுற்று 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்சிபி VS குஜராத் டைட்டன்ஸ்
இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் உள்ள ஹெச்பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தகுதிச்சுற்று 1 போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. வெங்கடேஷ் ஐயர் 19 ரன்களில் வெளியேறினாலும், விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் 30 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் கேப்டன் ரஜத் படிதார் களமிறங்கி, குஜராத் பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசிய அவர், 9 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கிருனால் பாண்ட்யாவும் 43 ரன்கள் சேர்த்ததால், 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் என்ற மலை போன்ற இலக்கை நிர்ணயித்தது.

வெற்றி இலக்கை நோக்கி...
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் ராகுல் தெவாட்டியா மட்டும் போராடி 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ஆர்சிபி பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கிருனால் பாண்ட்யா மற்றும் ரஷிக் சலாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இறுதிப்போட்டிக்குள்...
இறுதியில், ஆர்சிபி அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது. ஹெச்பிசிஏ மைதானம் முழுவதும் ஆர்சிபி ரசிகர்களின் கொண்டாட்டக் குரல்கள் முழங்கின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved