Also Watch
Read this
By: Manigandan Raja

ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் :
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள செட்டிமேட்டைச் சேர்ந்தவர் ஜெகன் சாலமன். இவர் சேரன்மகாதேவி அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் வேலை பார்த்து
வந்துள்ளார். இந்நிலையில் அவரை திடீரென சபை நிர்வாகிகள் பணி நீக்கம் செய்தனர்.
இதற்கு சேரன்மகாதேவி அருகே உள்ள கோவில் அம்மாள்புரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் தான் காரணம் என கருதி சுப்பிரமணியன் மீது ஜெகன் சாலமனுக்கு முன் விரோதம்
ஏற்பட்டுள்ளது இருந்த போதும் அவரிடம் நண்பர் போல் பழகி வந்துள்ளார். சுப்பிரமணியன் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி ஜெகன் சாலமன் தனது வீட்டில் ஜெபம் நடப்பதாகவும் அதில் கலந்து கொள்ள வருமாறு சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுத்தார்.

இதனை உண்மை என்று நம்பி சுப்பிரமணியன் அவரது வீட்டிற்கு சென்றார் இதைத்தொடர்ந்து ஜெகன் சாலமன் உட்பட மூன்று பேர் சேர்ந்து சுப்ரமணியனை ஒரு காரில் ஏற்றி திசையன்விளைக்கு கடத்திச் சென்றனர்.
அங்குள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்து ரூபாய் ஒரு கோடி தந்தால் தான் விடுவிப்போம் என மிரட்டி உள்ளனர். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் தனது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளார்.
அவரது குடும்பத்தினரும் ஜெகன் சாலமன் கூறியபடி அவரது நண்பர் வீட்டில் ரூபாய் 5 லட்சத்தை முதற்கட்டமாக கொடுத்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவில் சுப்பிரமணியன் தோட்டத்திலிருந்து தப்பி ஓடி வந்து திருக்குறுங்குடி போலீசில் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகன் சாலமன் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர். ரூபாய் ஒரு கோடி கேட்டு முதியவர் கடத்தப்பட்ட சம்பவம் களக்காடு மற்றும் திருக்குறுங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved