Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 11:12 AM
By: Fyrose Banu

விழுப்புரத்தில் திருமணம் செய்து ஏமாற்றிய கணவர் மீது கருக்கலைப்பு, மிரட்டல், அடித்து துன்புறுத்தியதாக பெண் ஒருவர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். T. எடப்பாளையம் பகுதியை சேர்ந்த 28 வயதான பெண் ஆரிபா, தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றியதாக கணவர் முகமது ஆரிப் மற்றும் அவரது பெற்றோர் மீது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
மிரட்டி, அடித்து, கருக்கலைப்பு
புகாரில் அதே பகுதியை சேர்ந்த முகமது ஆரிப் என்பவர், திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, திருமணத்திற்கு முன்பே பல இடங்களுக்கு அழைத்து சென்று வற்புறுத்தி உறவு வைத்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் கர்ப்பமானதாகவும், அதை கலைக்கும்படி மிரட்டி, அடித்து, மருந்து கொடுத்து கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய முறையில் திருமணம்
பின்னர், கடந்த 20.09.2025 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் சித்தூர் தர்காவில் இஸ்லாமிய முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தனியாக தங்க வைத்து அவ்வப்போது வந்து உறவு கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீண்டும் கர்ப்பமான நிலையில், திருமணத்திற்கு மறுநாளே மற்றொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருப்பது தெரியவந்ததாகவும், இதை பற்றி கேட்டபோது தன்னை விட்டு விலகச் சொல்லி, வேறு திருமணம் செய்து கொள்வதாக கணவர் தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சமும் 50 பவுன் நகையும்...
மேலும், கணவரின் பெற்றோர் 5 லட்சம் ரூபாய் பணமும் 50 பவுன் நகையும் வரதட்சணையாக வழங்கினால் மட்டுமே சேர்த்து வைப்போம், இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும், அவதூறு பேசி அவமதித்ததாகவும் தனது கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கடந்த வாரம் கணவரின் இல்லத்திற்கு சென்ற பொழுது கணவரின் உறவினர்கள் கடுமையாக தாக்கி பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியதாகவும் இதன் காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று இன்றைய தினம் காயங்களுடன் விழுப்புரம் எஸ்பி அலுலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved