Also Watch
Read this
நடிகர் சிவாஜி கணேசனின், தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் வரும் ’ராஜா காது கழுதை காது’ என்ற கதையை கிண்டலுடன் உதாரணமாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் ரத்து ரகசியம் குறித்து உதயநிதி ஸ்டாலின் இப்போதாவது கூறுவாரா? என கேள்வி எழுப்பினார். மேலும், நீட் தேர்வை கொண்டு வந்ததும், திமுக காங்கிரஸ் தான், அதனை எதிர்ப்பதும் திமுக காங்கிரஸ் தான் எனவும் விமர்சனம் செய்தார்.

சேப்பாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி
சென்னை, சேப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
இது, துணை முதல்வர் உதயநிதி தொகுதி, அவர் எம்எல்ஏ ஆவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? கழிப்பறை வசதி செய்து கொடுப்பதாகச் சொன்னார், செய்தாரா? 525 வாக்குறுதிகள் கொடுத்த திமுக அவற்றில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் ரத்து செய்வதாகச் சொல்லி செய்யவில்லை.

நீட் தேர்வு ரகசியம் என்ன?
நீட் தேர்வுக்கு ரகசியம் இருக்கிறது என்றார். ‘தங்கமலை ரகசியம்’ என்ற படம் இருக்கிறது, நீட் ரகசியத்தை வெளியிட்டால், அந்த கதை மாதிரி ஆகிவிடும் என்று பயப்படுகிறார் உதயநிதி. இன்றுவரை நீட் விலக்கு பெற வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு.

காங்கிரஸ் தலைவரின் மனைவி நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார். செய்தது எல்லாம் காங்கிரஸ். ஆனால், திமுக நம் மீது பழி போடுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா? இதுதான் ஸ்டாலினின் இரட்டை வேடம்.

கொரோனா காலத்தில்...
கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஸ்டாலின் சரியான ஆலோசனை தரவில்லை. அப்போது எங்கே காணாமல் போனீர்கள்? என்று கேட்டேன். அதற்கு புலம்புகிறார். காணாமல் போனார் என்று தான் பேசினேனே ஒழிய, தவறாகப் பேசவில்லை. அப்படி பேசவேண்டிய அவசியமில்லை. ஆனால், நீங்களும், உதயநிதியும் எப்படி கேவலமாகப் பேசினீர்கள், காலுக்குள் இருக்கிறேன் என்று சொன்னீர்கள், இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் 10 வார்த்தை திருப்பி பேச முடியும். நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நானல்ல, எதிரிகள் தான். 51 ஆண்டுகால அரசியல் வாழ்வில் நான் யாரையும் தவறாக விமர்சிக்கவில்லை. என்னை அவதூறாகப் பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டேன். உடனுக்குடன் தகுந்த பதிலடி கொடுப்பேன்.

மூன்றே மாதத்தில் ஒழிக்கப்படும்
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழகம். இதனால், மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. 2 வயது சிறுமி, பாட்டியைக் கூட விட்டுவைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். இந்தியாவுக்கே முன் மாதிரி மாநிலம் தமிழ்நாடாம், ஊழல் செய்வதில், கடன் வாங்குவதில் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved