Also Watch
Read this
By: Manigandan Raja

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

"என் உயிர் தோழியை, என் மனைவியாக்கிக் கொண்டேன்"
பல ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், திருமண பந்தத்தில் இணைந்தனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தானாவின் திருமணம் பிரம்மாண்டமாக ராஜஸ்தானில் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

உதய்பூரில் உள்ள ‘ITC மெமெண்டோஸ்’ என்ற பிரம்மாண்ட அரண்மனை ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா தனது இன்ஸ்டா பக்கத்தில், என் உயிர் தோழியை… என் மனைவியாக்கிக் கொண்டேன் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கற்றுக்கொடுத்த மனிதர்...
திருமணத்துக்குப் பிறகு ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவையும் எழுதியுள்ளார்.
அதில், "உண்மையான அன்பு என்றால் என்ன என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்த மனிதர், மன அமைதியுடன் இருப்பது எப்படி என்பதை எனக்குக் காட்டிய மனிதர். பெரிய கனவுகளைக் காண்பதில் எந்தத் தவறும் இல்லை என்று தினமும் என்னிடம் சொன்னவர். நான் நினைத்துப் பார்ப்பதை விடவும் மிகப்பெரிய உயரங்களை என்னால் அடைய முடியும் என்று தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்தவர். யாரும் பார்க்காதது போல் சுதந்திரமாக நடனமாடுவதை ஒருபோதும் தடுக்காதவர். நண்பர்களுடன் பயணம் செய்வதுதான் உலகிலேயே மிகச்சிறந்த விஷயம் என்று எனக்குக் காட்டியவர்.

உண்மையைச் சொல்லப்போனால், இந்த மனிதரைப் பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும். இன்று நான் எந்த மாதிரியான பெண்ணாக இருக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டேனோ, அந்தப் பெண்ணாக நான் மாறியிருக்கிறேன் என்றால், அதற்கு அவரே காரணம். நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள்.

விஜ்ஜு, உன் மீது நான் வைத்திருக்கும் உணர்வுகளை விவரிக்க எனக்கு எப்போதும் வார்த்தைகள் போதாது. இதை நான் உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால், இப்போது திடீரென்று என்னுடைய சாதனைகள், போராட்டங்கள், மகிழ்ச்சி, சோகம் என எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது.

ஏனென்றால் இத்தனையையும் நேரில் பார்த்து, என் வாழ்க்கையின் மிகப்பெரிய அங்கமாக நீ இருக்கிறாய். உன் மனைவியாகப் போகிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. உன் மனைவியாக இருப்பதும், உன் மனைவி என்று அழைக்கப்படுவதும், இனி எல்லாமே கொண்டாட்டம்தான்.

நாம் இருவரும் இணைந்து இந்த உலகிலேயே மிகச்சிறந்த வாழ்க்கையை வாழ்வோம். உன்னை நான் நேசிக்கிறேன்.
இவ்வாறு ராஷ்மிகா (Rashmika Mandanna) நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மார்ச் 4ஆம் தேதி பிரம்மாண்டம்
இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் 4ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved