Also Watch
Read this
By: Manigandan Raja

கீவ் நகரத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல் :
உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் காரணமாக பல வாகனங்கள் தீக்கிரையாகின. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒடேசா நகரில் மக்கள் வாழும் பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் பலியான நிலையில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹாரி :

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் பழங்குடியினருடன் நடைபயணம் மேற்கொண்டனர். மெல்போர்ன் நகர மையத்தில் உள்ள ஃபெடரேஷன் சதுக்கத்தில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தின் போது, பழங்குடியினரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை கேட்டு தெரிந்து கொண்ட ஹாரி - மேகன் தம்பதி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
ஏற்கனவே 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்த இந்த தம்பதி, 2020ல் பிரிட்டிஷ் அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகியபின் தற்போது சென்றுள்ளனர்.
நேபாளத்தில் குங்குமத் திருவிழா கோலாகலம் :

காத்மாண்டுவில் நேபாள புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிந்தூர் ஜாத்ரா எனப்படும் குங்குமத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. காத்மாண்டு புறநகர் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்தியப்பூர் திமி ((Madhyapur Thimi))பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற சிந்தூர் பொடியை ஒருவர் மீது ஒருவர் தூவி, பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் கொண்டாடினர்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் லெபனான் :
இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 39 முறை லெபனான் ராணுவ தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்புகள் மற்றும் ராணுவ வாகனங்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதாக லெபனான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு லெபனான் படைகள் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றன.
34 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக சந்திப்பு :
சுமார் 34 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக லெபனான் - இஸ்ரேல் தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து பேச உள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நிலவி வரும் மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டுத் தலைவர்கள் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை வாஷிங்டனில் நிகழ்த்த உள்ளனர்.
34 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடித் சந்திப்பு இதுவாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved