Also Watch
Read this
By: Manigandan Raja

ஆடிட்டர் வீடுகளில் சோதனை :
திண்டுக்கல்லில் தேர்தல் பறக்கும் படையினரின் உதவியுடன், வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் ஆடிட்டர் ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆர் எம் காலனி அருகே உள்ள துரைராஜ் நகரில் ஆடிட்டர் பாலசுப்பிரமணி இல்லம் மற்றும் விவேகானந்தா நகரில் உள்ள ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவன அதிபர் வைரவன் இல்லத்தில் மதுரையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இன்று மதியம் 3.30 மணியளவில் 2 கார்களில் வந்திறங்கிய அதிகாரிகள், ஆடிட்டர் பாலசுப்பிரமணி வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். பின் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.
அதேபோல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் மாலை 4.30 மணியளவில் விவேகானந்தா நகரில் உள்ள வைரவன் இல்லத்திற்குச் சென்ற அதிகாரிகள், அங்கு அதிரடி சோதனையைத் தொடங்கினர். சோதனை நடைபெற்ற 6 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டின் கதவுகள் மூடப்பட்டன. உள்ளே இருந்தவர்கள் வெளியே வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
ஒவ்வொரு அறையிலும் அதிகாரிகள் அணு அணுவாகச் சோதனையிட்டனர். தற்போது சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்தச் சோதனையின் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப் பணம் ஏதேனும் சிக்கினால், அவை முறைப்படி தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் உரிய அனுமதிக்குப் பிறகே வருமான வரித்துறையினர் அதனை எடுத்துச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனை அரசியல் வட்டாரத்திலும், தொழிலதிபர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved