Also Watch
Read this
By: Manigandan Raja

தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்தவர்நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரிப்பு :
"கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்" என வானதிக்கு ஆறுதல்....

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று கோவைக்கு வருகை தந்தார்.
சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை முடித்துவிட்டு, அங்கு இருந்து விமானம் மூலம் நேரடியாகக் கோவை வந்தடைந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா, அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை உள்ள வானதி சீனிவாசனைச் சந்தித்து நீண்ட நேரம் நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் வானதி சீனிவாசனிடம் பேசிய ரேகா குப்தா,
"திருப்பதிக்குச் சென்று உங்களுக்காக அர்ச்சனை செய்து விட்டு நேராக இங்கு வருகிறேன். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனை. கவலைப்படாதீர்கள், உங்கள் சார்பில் நான் கோவை வடக்குத் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இந்தத் தேர்தலில் உங்கள் வெற்றி நிச்சயம்" என உருக்கமாகத் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
வானதி சீனிவாசன் இல்லாத நேரத்தில், அவரது மகன்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏற்கனவே களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், டெல்லி முதல்வரின் இந்தப் வருகையும், நேரடிப் பிரச்சாரமும் கோவை வடக்குத் தொகுதி பா.ஜ.க தொண்டர்களிடையே ஒரு மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரேகா குப்தா இன்று மாலை கோவை வடக்குத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குச் சேகரிக்க உள்ளார்.ஒரு மாநிலத்தின் முதல்வர், வேட்பாளருக்காகத் திருப்பதியில் அர்ச்சனை செய்து விட்டு நேரடியாக வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved