Also Watch
Read this
Posted on: Jan 21, 2026 10:29 AM
By: Manigandan Raja
சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று, திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உட்பட யாராக இருந்தாலும் தேர்தல் நேரம் என்று கூட பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய அறிவுரைகள் என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தேர்தல், கூட்டணி, தொகுதி பங்கீடு
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளதோடு, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, மற்றொரு பக்கம் எந்தெந்த கட்சிகள் யாருடன்? கூட்டணி செல்கின்றன என்ற கேள்விகளுக்கு தற்போது வரை பதில் கிடைக்காத நிலையில், நிர்வாகிகளை தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்படுத்த அரசியல் கட்சிகள் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் திருச்சியில் மார்ச் 8ஆம் தேதி திமுக பிரச்சார மாநாடு நடைபெறும் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அடைவதற்கான முன் திட்டமிடல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
"சூழ்ச்சிக்கு யாரும் பலியாகி விடக் கூடாது"
பின்னர், கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கியதோடு, தனி நபர்களை விட கட்சி தான் பெரிது என்றும், அமைச்சர்கள் உட்பட யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என எச்சரித்தார். தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒருசிலர் இருக்கத்தான் செய்வார்கள் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்கள் தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம் என்றும், அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகி விடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
கட்சியினருக்கு அறிவுறுத்தல்
அரசின் திட்டங்களால் சுமார் 2 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், ஒரு குடும்பம் விடாமல் எல்லாரும் திட்டங்களால் பயனடைய வேண்டும் என பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அந்த பயனாளிகள் அனைவரையும் இனிமேல் நம்முடைய வாக்காளர்களாக உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடம் தான் உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் பாருங்கள் - அதிமுக கூட்டணியில் டி.டி.வி.தினகரன்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved