Also Watch
Read this
By: Manigandan Raja

கஞ்சா பறிமுதல் :
15.05.2026 அன்று தெற்கு ரயில்வே, ரயில்வே பாதுகாப்பு படை (RPF) முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையாளர் திரு. கே. அருள்ஜோதி, சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையாளர் திரு. வல்லேஸ்வர பாபுஜி தொக்ளா மற்றும் உதவி பாதுகாப்பு ஆணையாளர் திரு. அலோக்குமார் ஆகியோரின் உத்தரவின்பேரில், சென்னை எழும்பூர் RPF இன்ஸ்பெக்டர் திரு. கே. பி. ஜெபஸ்டின் தலைமையிலான சிறப்பு குழுவினர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின் போது இரண்டு தனித்தனி சம்பவங்களில் கஞ்சா மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
முதல் சம்பவம் :
15.05.2026 அன்று இரவு சுமார் 20.30 மணியளவில், மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை எழும்பூர் வழியாக திருச்சி செல்லும் ஹவுரா – திருச்சி விரைவு ரயில் எண் 12663, சென்னை எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை எண் 07-ல் நின்றிருந்த போது சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த *எம். பகவதி (37), தந்தை பெயர் மாயாண்டி* என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்த இளஞ்சிவப்பு நிற டிராலி பையை சோதனை செய்தபோது, செலோ டேப்பால் சுற்றப்பட்ட பழுப்பு நிற கட்டுகளுக்குள் சுமார் *5 கிலோ உலர் கஞ்சா* இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் *ரூ.2.5 லட்சம்* ஆகும்.
முதற்கட்ட விசாரணையில், ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை உரிமையாளரிடமிருந்து கஞ்சாவை பெற்று, திண்டுக்கல் மாவட்டம் அக்கரப்பட்டியைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றதாக தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் அதனை கடத்தி வந்த நபர் ஆகியோர் சென்னை எழும்பூர் RPF அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
இரண்டாவது சம்பவம் :
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் RPF அதிகாரிகள் மேற்கொண்ட மற்றொரு சிறப்பு சோதனையில், ஆந்திராவுக்கு கடத்த முயன்ற *23 மூட்டைகளில் சுமார் 425 கிலோ பொது விநியோக திட்ட (PDS) ரேஷன் அரிசி* பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மேல்நடவடிக்கைக்காக சிவில் சப்ளைஸ் CID அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரயில்வே வழியாக நடைபெறும் சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved