வாலிபால் போட்டியில் வெற்றி பெற்று, தங்கம் வென்றவர்களை, உற்சாகமாக வரவேற்ற காட்சி, நெகிழ்ச்சியடைய வைத்தது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இதில், மாநிலம் முழுவதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்நிலையில், தஞ்சை பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் தஞ்சையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் ஏழு பேர், முதல் பரிசு பெற்று தங்கம் வென்று பள்ளி திரும்பினர். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பட்டாசு வெடித்து, பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி, தாரை, தப்பாட்ட இசையுடன் சக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்றனர்.