இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் போர் அபாயத்தை தணிக்க உதவுமாறு பாகிஸ்தான் ரஷ்யாவுக்கு தூது விட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள பாகிஸ்தான் தூதர் முஹம்மது காலித் ஜமாலி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதின் நிர்வாகத்தினருடன் இது குறித்து பேசிய பின்ரஷ்ய அரசு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவுக்கு ரஷ்யாவுடன் மிகவும் முக்கிய உறவு இருப்பதாகவும், பாகிஸ்தானுக்கும் ரஷ்யாவுடன் நல்ல உறவு இருப்பதால், அதிபர் புதின் தலையிட்டு இந்திய-பாகிஸ்தான் பதற்றத்தை குறைக்க உதவ வேண்டும் என தெரிவித்தார்.ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ், இரு தரப்பும் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.