Also Watch
Read this
By: Manigandan Raja

சர்வதேச சந்தையில் மீண்டும் 100 டாலருக்கு கீழ் குறைந்தது :
ஈரான் போர் நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 20 சதவிகிதம் வரை அதிரடியாக குறைந்தது..! ஈரானில் உள்ள எண்ணெய் வளங்கள் மீதும் இஸ்ரேலும், வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியது.

இதனால் பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியது. இந்நிலையில், திடீரென அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் காரணமாக பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் சரிந்து சர்வதேச சந்தையில் 91 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரிக்கை :
தாக்குதல் நிறுத்தப்பட்டதால் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அர்த்தமில்லை என ஈரான் எச்சரித்துள்ளது..! இது தொடர்பாக ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீதான அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், ஈரானின் கை எப்போதும் துப்பாக்கிகள் மீதே இருக்கும் என்றும், எதிரிகள் சிறு தவறு செய்தால் கூட முழு பலத்துடன் பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
குண்டுவீச்சை நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் ஒப்புதல் :
ஈரான் மீதான குண்டுவீச்சு தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிடமிருந்து 10 அம்சத் திட்டவரைவைப் பெற்றுள்ளதாகவும், பெரும்பாலான முக்கியப் பிரச்சனைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது இருதரப்பு போர்நிறுத்தமாக அமையும் என்றும், இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதைப் பொறுத்தே இந்த இடைநிறுத்தம் அமையும் என்றும் தெரிவித்தார். இந்த இரண்டு வார கால அவகாசம், ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் முழுமைப்படுத்தவும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டலால் ஈரான் மக்கள் அணிவகுப்பு :
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டலை தொடர்ந்து, பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை சுற்றி ஈரான் மக்கள் மனிதச்சங்கிலி அமைத்துள்ளனர். பாலத்தின் மீது பிரம்மாண்டமான ஈரான் நாட்டு கொடியை பிடித்தபடி ஆண்களும், பெண்களும் அணிவகுத்து நின்றனர்.
அதேபோல, ஈரான் நாட்டு கொடிகளை கைகளில் ஏந்தியபடி, மின் உற்பத்தி நிலையங்களை சுற்றி மனிதச்சங்கிலி அமைத்து நின்றனர். பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்ததால், மனிதச்சங்கிலி அமைக்க ஈரான் அரசு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க வலியுறுத்தி பஹ்ரைன் தீர்மானம் :
ஈரான் முடக்கியுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வலியுறுத்தி, பஹ்ரைன் கொண்டுவந்த தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வியடைந்தது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியான கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க, பாதுகாப்பு படையை அமைப்பது தொடர்பாக பஹ்ரைன் தீர்மானம் கொண்டு வந்தது.
ஆனால், இந்த தீர்மானம் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதாக கூறினாலும், பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷ்யாவும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததோடு, ரஷ்யாவும், சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஈரான் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கும் முயற்சியை முறியடித்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved