Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 05:59 AM
திமுக கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டுக்கு இம்முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கூட்டணியில் அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதை தாண்டி, பாஜகவை வீழ்த்துவது ஒன்றே இலக்கு என்று மாநில செயலாளர் வீரபாண்டியன் விளக்கம் அளித்து உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என்று, தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. திமுகவில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேகவுக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று மார்ச் 18ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
திமுக நிர்பந்திக்கவில்லை
அண்ணா அறிவாலயத்தில், வீரபாண்டியன் கூறியதாவது;
கடந்த முறையை விட இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று, திமுகவிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பெரியண்ணன் போக்கில், திமுக ஒருபோதும் நடந்தது இல்லை. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுக நிர்பந்திக்கவில்லை, கட்டளையிடவில்லை, அழுத்தம் தரவில்லை. மாறாக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைந்து உள்ளதால் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் ஓரணியில் சேர்ந்து உள்ளோம்.
இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved