Also Watch
Read this
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தொழில்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம்
மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் வரி வருவாய் குறித்து ஆலோசனையும், நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும் திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தின் நிலை தொடர்பாகவும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தனியாக மீண்டும் ஒரு ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து ஆலோசனை என தகவல்
வேளாண்மைத்துறை மற்றும் நீர்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொழில் நிறுவன உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் இயங்கும் தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் BMW, CI, TVS, இந்துஸ்தான் மோட்டார் உள்ளிட்ட கார் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தொழில் முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் மின்சார வாகன உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கார் உற்பத்தி துறையை மேம்படுத்துதல், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved