Also Watch
Read this
எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்எல்ஏக்கள் இபிஎஸ் இல்லத்திற்கு வந்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் தற்போது முடிவுக்கு வருகிறது.
இபிஎஸ் இல்லத்தில் வேலுமணி தரப்பு
எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்எல்ஏக்கள் இபிஎஸ் இல்லத்திற்கு சென்றடைந்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் தற்போது முடிவுக்கு வருகிறது

சி.வி.சண்முகம் செல்லவில்லை
இபிஎஸ் இல்லத்திற்கு எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்எல்ஏக்கள் புறப்பட்ட நிலையில் சி.வி.சண்முகம் செல்லவில்லை. சி.வி.சண்முகம் தவிர மற்ற அனைத்து எம்எல்ஏக்களும் இபிஎஸ் இல்லத்திற்கு வந்துள்ளனர்.
என்ன நடக்கிறது அதிமுகவில்?
அதிமுகவில் நடக்கும் அரசியல் பரபரப்பு, ஒவ்வொன்றும் தனிரகம்தான். தலைப்புச்செய்தியும் அதுதான். தேர்தலில் தோல்வியை தழுவ முழுமுதற் காரணம் இபிஎஸ்தான் என முறைத்துக்கொண்டு சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க அவர்களை கட்சி பதவியில் இருந்தே தூக்கி தனது பவரை காட்டினார் இபிஎஸ். இதனிடையே, கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து உள்ள பதவியும் கைவிட்டுப் போய்விடுமோ? என்ற பயத்தில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரும் ஆற்காடு தொகுதி எம்எல்ஏவுமான சுகுமார், பண்ருட்டி எம்எல்ஏ மோகன், அந்தியூர் எம்எல்ஏ ஹரி பாஸ்கர், சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன், காங்கேயம் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜன் ஆகிய 4 பேர் இபிஎஸ்ஸை சந்தித்து பழையபடியே அவரது கூட்டுக்குள் இணைந்து கொண்டனர்.

வேலுமணி தரப்பின் நிபந்தனைகள்
சென்னையில் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இபிஎஸ் சார்பில் அவரது ஆதரவாளர்களும் எதிர் தரப்பில் வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையின்போது, அதிமுகவில் வழிகாட்டு குழு ஒன்றை அமைக்க வேண்டும், அந்த வழிகாட்டு குழு எடுக்கும் முடிவையே அதிமுக பொதுச்செயலாளர் செயல்படுத்த வேண்டும், வழிகாட்டு குழுவில் இருதரப்பை சேர்ந்தவர்களும் இடம்பெற வேண்டும், தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிகளை திரும்ப அளிக்க வேண்டும், கட்சி பிளவுபட்டபோது யார் எந்த பதவியில் இருந்தார்களோ அதே பதவியைதான் கட்டாயம் தொடர வேண்டும், வேலுமணி தரப்பை நம்பி வந்த யார் மீதும் நடவடிக்கை கூடாது என்ற நிபந்தனைகளை வேலுமணி தரப்பினர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
அதிகாரத்தை குறைக்க திட்டம்
இந்த நிபந்தனைகளை எல்லாம் காதுகொடுத்து கேட்ட இபிஎஸ் தரப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில், வழிகாட்டுகுழு அமைத்தால் தனது அதிகாரம் குறையும் என இபிஎஸ் எண்ணுவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாது, வேலுமணி தரப்பினரின் பதவிகளை திருப்பி அளிப்பதிலும் இபிஎஸ் நிபந்தனை விதித்ததாக கூறப்படும் நிலையில் ஒருவேளை மாவட்ட செயலாளர் பதவியை திருப்பி அளித்தாலுமே அதிகாரத்தை குறைக்க திட்டமிட்டுள்ளாராம்.

சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை
வேலுமணி, தற்போது 10 தொகுதிகளுக்கு சேர்த்து மாவட்ட செயலாளராக உள்ளார். அதனை 2 அல்லது 3 ஆக உடைத்து ஒன்றிற்கு மட்டும் வேலுமணியை மாவட்ட செயலாளராக்க சம்மதித்து உள்ளதாகவும் தற்போது நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களின் அதிருப்தியை சம்பாதிக்க இபிஎஸ் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரம் இபிஎஸ் தரப்புடனான இந்த பேச்சுவார்த்தையை சி.வி.சண்முகம் விரும்பவில்லை எனவும் உடன் இருப்பவர்கள் விருப்பத்தை ஏற்றே சி.வி.சண்முகம் இறங்கி வந்ததாகவும் கூறப்படும் நிலையில் பேச்சுவார்த்தையில் சி.வி.சண்முகம் பங்கேற்கவும் இல்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved