Also Watch
Read this
தென்மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக கருதப்படும் அதிமுகவின் முக்கிய புள்ளியான இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் தன்னை இணைத்து கொண்டார். எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்கு உரியவராக வலம் வந்த இசக்கி சுப்பையாவின் இந்த அதிரடி கட்சி தாவல், தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அம்பாசமுத்திரத்தில்...
கடந்த 2011ஆம் ஆண்டு, அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா, நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் தொகுதியில் அமோக வெற்றி பெற்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், வெறும் 48 நாட்களில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரனின் அமமுகவில் இணைந்ததை தொடர்ந்து, இசக்கி சுப்பையாவுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட அவர், படுதோல்வியை சந்தித்தார்.

தவெகவில் இசக்கி சுப்பையா
மீண்டும் தனது அரசியல் தாயகமான, அதிமுகவுக்கே திரும்பிய இசக்கி சுப்பையா, 2021 சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் தனது செல்வாக்கை நிலைநாட்டினார். தொடர்ந்து 2026 தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்று வெறும் 15 நாட்களில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இசக்கி சுப்பையா. அதிமுகவின் முக்கிய புள்ளியாகக் கருதப்பட்ட இவர், தற்போது MLA பதவியைத் துறந்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோருக்குப் பிறகு, தவெகவில் இணையும் நான்காவது அதிமுக எம்.எல்.ஏ. ஆக இசக்கி சுப்பையா மாறியுள்ளார்.

அரசியல் அதிர்வலைகள்
சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி பழனிசாமியின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வேலுமணியுடன் இணைந்து இசக்கி சுப்பையா தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தார். இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தொடர் ராஜினாமாக்களால், அதிமுகவின் பலம் சட்டமன்றத்தில் கணிசமாகக் குறைந்து உள்ளதோடு, அக்கட்சியின் உட்கட்சிப் பூசலும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் இது குறித்து முறையிட்டு வந்தாலும், இசக்கி சுப்பையாவின் இந்த நகர்வு தற்போதைய அரசியல் காய் நகர்த்தலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தென் மாவட்டங்களில்...
தவெகவின் வளர்ச்சி தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற விமர்சனம் எழுந்து வரும் சூழலில், இசக்கி சுப்பையாவுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு தவெகவுக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகால அனுபவம், தேர்தல் கள யுக்திகள் மற்றும் தென் மாவட்ட சாதிய, சமூக கட்டமைப்புகளை அறிந்தவர் என்பதால், தவெகவை அந்த மண்டலத்தில் பலப்படுத்த இசக்கி சுப்பையா முக்கியப் பங்காற்றுவார் எனவும் கணிக்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved