Also Watch
Read this
திரைத்துறையில் கோடி கோடியாக சம்பாதித்துவிட்டு, தனது சூப்பர் ஸ்டார் இடத்தையும் விட்டுவிட்டு, மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கும் முதல்வர் விஜய்யை, எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிடுகிறோம் என்று தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா கூறி உள்ளார்.

இசக்கி சுப்பையா ராஜினாமா
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து உள்ளார். காலையில் பதவியை ராஜினாமா செய்தநிலையில், மதியம் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். ஏற்கனவே திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அம்பாசமுத்திரம் தொகுதியையும் சேர்த்து மொத்தம் 5 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நியூஸ் தமிழ் சிறப்பு நேர்காணலில் இசக்கி சுப்பையா
இந்நிலையில், நியூஸ் தமிழ் சிறப்பு நேர்காணலில் பங்கேற்ற, இசக்கி சுப்பையா கூறியதாவது;
திரைத்துறையில் கோடி கோடியாக சம்பாதித்துவிட்டு, தனது சூப்பர் ஸ்டார் இடத்தையும் விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கும் முதல்வர் விஜய்யை எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிடுகிறோம். அப்போது, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார், இப்போது விஜய், தவெகவை தொடங்கி ஆட்சியை பிடித்துள்ளார்.

முன்னுரை டூ முடிவுரை?
அதிமுகவை தொடங்கி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முன்னுரை எழுதினார், ஜெயலலிதா அதற்கு கருத்துரை எழுதினார். இன்றைக்கு இருப்பவர்கள் முடிவுரை எழுதி விடுவார்களோ? என்று பயமாக இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடந்ததா? என்ற யூகத்திற்கு பதில் கூற முடியாது.
முதலில் சொன்னதே நான்தான்
பெரும்பான்மையான மக்கள் வாக்களித்த தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான்தான் முதலில் வலியுறுத்தினேன். தவெக ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்படி கூறினேன்.

தவெகவில் இணைந்தது ஏன்?
கடந்த ஆட்சிக் காலத்தில் தொகுதி மக்களுக்காக நான் வைத்த எந்த கோரிக்கையையும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. ஆளுங்கட்சியுடன் இணைந்து செயல்பட்டால்தான் தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். தொகுதி மக்களின் நலனுக்காகத் தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன்.

குறுகிய காலத்திலேயே அதிரடி
முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, டாஸ்மாக் கடைகளை மூடியது என்று அதிரடி காட்டினார் முதல்வர் விஜய். டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை என்று குறுகிய காலத்தில் நல்ல விஷயங்களை செய்திருப்பவர், இனியும் சிறப்பாக செயல்படுவார்.

முதல்வரின் சிறப்பான செயல்பாடு
நான் எப்போதும் இரட்டை இலைக்கோ அல்லது எனக்கோ வாக்களியுங்கள் என்று கூறியதே இல்லை. யார் நல்லவர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தான் கூறியுள்ளேன். ஆட்சி பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே முதலமைச்சர் விஜய் சிறப்பாக செயல்படுகிறார். இதுவரை நான் எந்த கையூட்டும் பெறவில்லை, இனிமேலும் கையூட்டு பெற மாட்டேன்.
இவ்வாறு இசக்கி சுப்பையா கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved