Also Watch
Read this
Posted on: Mar 27, 2026 05:51 AM
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பெட்ரோலுக்கான கலால் வரியை 13 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாக குறைத்து, முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதிகரிக்கும் போர் பதற்றம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் தாக்கம் இந்திய நாட்டிலும் எதிரொலித்து வருகிறது. இந்தச் சூழலில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து உள்ளது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு எண்ணெய் தொழில் மேம்பாட்டு வாரிய வரி, தற்செயல் தேசிய பேரிடர் வரி, கலால் வரி, கூடுதல் கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி போன்ற வரி விதிக்கப்படுகிறது.
கலால் வரி குறைப்பு
மேற்காசிய போர் சூழலால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான எரிபொருளுக்கான கலால் வரியை அரசு குறைத்து உள்ளது.

எரிபொருள் விலை குறையுமா? கூடுமா?
இதுகுறித்து, அரசு வெளியிட்ட அறிவிப்பாணை:
பெட்ரோல் மீதான கூடுதல் கலால் வரி Additional Excise Duty ஒரு லிட்டருக்கு ரூ.13ல் இருந்து ரூ.3 என்றும், டீசல் மீதான கூடுதல் கலால் வரி ரூ.10ல் இருந்து பூஜ்ஜியமாகவும் குறைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவினத்தை குறைக்கும் வகையில் தற்போது கூடுதல் கலால் வரியை மத்திய அரசு குறைந்துள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் விலை இந்திய சந்தையில் குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த கூடுதல் கலால் வரி குறைப்பு நடவடிக்கை மூலம் சில்லறை சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

42,000 மெட்ரிக் டன் LPG கப்பல் வருகை
இரு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 60 நாட்களுக்கான எரிபொருளை கொள்முதல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

42,000 மெட்ரிக் டன் எல்.பி.ஜி. எரிவாயு உடன் இந்தியாவுக்கு ஜக் வசந்த் கப்பல் வந்து சேர்ந்து உள்ளது. குஜராத் துறைமுகத்திற்கு வந்தடைந்ததை தொடர்ந்து, எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக நீங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இந்தியன் ஆயில் விற்பனை நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், பீதியுடன் வாங்குவதை தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பவும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved