Also Watch
Read this
Posted on: Mar 27, 2026 06:48 AM
தமிழக பெண்களை விலைமாதர்கள் என்று இழிவுபடுத்தும், பொன்ராஜ் போன்ற கயவர்களை கைது செய்யாதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டு பெண்களை இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்த பிறகும் கூட, பொன்ராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நடிகர் விஜய் தலைமையிலான கட்சியை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு, அந்தக் கட்சியில் உள்ள பெண்களை விலை மாதர்கள் என்ற பொருள்படும் அருவருக்கத்தக்க சொல்லைக் கொண்டு, விமர்சனம் செய்திருக்கிறார் பொன்ராஜ். அரசியல் விமர்சகர் என்ற பெயரில், தமிழ்நாட்டு பெண்களை இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்த பிறகும் கூட, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கவே முடியாது
நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சை எழுந்த போது, அவருக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த சில பெண்கள் கருத்து தெரிவித்திருந்தனர். நடிகர் விஜய்க்கான அவரது கட்சியினரின் கண்மூடித்தனமான ஆதரவைத் தான் அது காட்டுகிறதே தவிர, அதற்கு மேல் அதில் ஆராய்ச்சி செய்வதற்கு எதுவுமில்லை; அது தேவையுமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சூழலுக்கு அது அவசியமுமில்லை. ஆனால், அப்துல்கலாமின் ஆலோசகர் என்றும், அரசியல் விமர்சகர் என்றும் பிழைப்பு நடத்தி வரும் பொன்ராஜ், விஜய் கட்சியில் இருக்கும் பெண்கள் எல்லாம் விலைமாதர்கள் என்று கூறியுள்ளார். தமிழர் பண்பாடு மற்றும் தமிழ் நாகரிகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் இதை ஏற்கவே
முடியாது.

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அறத்தின்படி பார்த்தாலும், சட்டத்தின்படி பார்த்தாலும் இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். ஆனால், இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கும் பதிவு செய்யாமல், கைது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் குறித்து எதிர்க்கட்சியினர் எதையாவது பேசினால் உடனடியாக சம்மன் அனுப்பி விசாரிக்கத் துடிக்கும், தமிழ்நாடு மகளிர் ஆணையமும், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்டனம் கூட தெரிவிக்காமல் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது.
வரும் தேர்தல் முடிவு கட்டுவது உறுதி
தமிழ்நாட்டுப் பெண்களை இழிவுபடுத்திய கயவரை காவல்துறை கைது செய்யாமலும், மகளிர் ஆணையம் விசாரணை நடத்தாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கான காரணங்களைத் தேடி ஆராய்ச்சி நடத்தத் தேவையில்லை. பெண்களை இழிவுபடுத்தும் அனைத்துக் கயவர்களின் புகலிடமாக திமுக மாறி வருகிறது. பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்; கடைசியில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை கொடுத்து விட்டால் அவர்கள் அனைத்தையும் மறந்து திமுகவுக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற அக்கட்சித் தலைமையின் திமிருக்கும், அகந்தைக்கும் வரும் தேர்தல் முடிவு கட்டுவது உறுதி.
இழிவுபடுத்துவதே வாடிக்கை
திமுக ஆட்சியில் ஒருபுறம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 129 விழுக்காடும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. இன்னொருபுறம் திமுகவின் அமைச்சர்கள் பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பொன்முடி அமைச்சராக இருந்த போது பெண்களை ஓசி பேருந்து என்று இழிவுபடுத்தியதுடன், சைவம், வைணவம், பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசினார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்துவிட்ட நிலையில் நீதிமன்றமே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு கொடுக்க வந்த ஏழைப்பெண்மணியை அதே மனுவால் அடித்து விரட்டி அவமதித்தார்.

அப்போது கண்டிப்பு, இப்போது...
திமுகவின் புதிய துதிபாடியாக உருவெடுத்திருக்கும் நகைச்சுவை நாடக நடிகர் ஒருவர், கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், ‘‘அந்தப் பெண் ஏன் புதருக்குள் போக வேண்டும். ஒவ்வொரு புதருக்கும் காவல்துறை லைட் போட முடியுமா?’’ என வினா எழுப்பியுள்ளார். ஏற்கனவே பெண்கள் எவ்வாறு பதவி உயர்வு பெறுகிறார்கள்? என்பது குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்காக சமூகத்தால் காறி உமிழப்பட்டவர். அப்போது அவரைக் கண்டித்த திமுக தலைமை, இப்போது அவரை கொண்டாடி வருகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெண்களை இழிவுபடுத்துவது திமுகவின் டி.என்.ஏ.வில் கலந்தது. திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கும் அந்த நோய் தொற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பொன்ராஜ் உள்ளிட்ட கயவர்கள் அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு புகலிடம் அளித்து வருவதற்காக தமிழ்நாட்டு பெண்களிடம் திமுக தலைமை நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved