Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 09:03 AM
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி, திமுக எம்பி கிரிராஜன் மனு அளித்து உள்ளார்.
திமுக எம்பி மனு
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரி ராஜன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா ஆகியோருக்கு எதிராக தனித் தனியாக வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்குகளில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைப்பதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, எல்இடி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு ஆகியன லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்டதாக, சுட்டிக்காட்டி உள்ளார்.
வருமானத்திற்கு மீறிய சொத்து
அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் , சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, சேலம் இளங்கோவன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் கூறி உள்ளார்.
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை
லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால், அந்த குற்றம் தொடர்பான வழக்கை தொடர முடியும் என்று, சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முகாந்திரம் உள்ளது
ஆகவே, லஞ்ச ஒழிப்புத் துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடர முடியும் என்றும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு உள்ளதால், சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இவர்கள் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று, ஒவ்வொரு மனுக்களிலும், கிரிராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved