Also Watch
Read this
Posted on: Feb 06, 2026 07:44 AM
By: Fyrose Banu

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பனி மற்றும் மழையின் காரணமாக நெல் பயிர்களில் பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வானிலை மாற்றத்தின் காரணமாக நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக பனி மற்றும் மழை மாறி மாறி பெய்து வருவதால் நெல் பயிர்களில் புகையான் நோய் மற்றும் இலை சுருட்டல் பூச்சி தாக்குதல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
குறிப்பாக நன்னிலம், திருக்கண்டீஸ்வரம், முடிகொண்டான், சன்னாநல்லூர், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சம்பா நெல் பயிர்களில் புகையா நோய் தாக்குதலும் அதே போன்று கதிர் வரும் நிலையில் இருக்கும் நெல் பயிர்களில் இலை சுருட்டல் பூச்சி நோய் தாக்குதலும் அதிகரித்துள்ளது இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் தற்போது இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக நெல் பயிர்கள் பாதிக்கப்படுவதால் வேளாண் துறை அதிகாரிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு என்ன மாதிரியான மருந்துகளை அடிக்க வேண்டும் என்ற ஆலோசனை வழங்க வேண்டும், அது மட்டும் இல்லாமல் தமிழக அரசு மானிய விலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அந்த மருந்தினை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved