Also Watch
Read this
வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வேட்புமனு தாக்கல் முடிந்து பிரச்சார வேனில் நின்றபடியே பேசிய உதயநிதி, இந்த முறையும் உதயசூரியன் உதித்தே தீரும் என்றும், இது வரலாற்று வெற்றியாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

துணை முதல்வர் உதயநிதி
2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் நிகழ்த்திய தாக்கத்தாலும், கட்சி நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலும் அதே ஆண்டு ஜூலை 4ஆம் தேதி திமுக இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின். இதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கசாலியை 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்எல்ஏ ஆனார் உதயநிதி.

அதன்பிறகு 2024 செப்டம்பர் மாதத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஐந்தே ஆண்டுகளில் இளைஞரணி செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என உருவெடுத்த உதயநிதியால், தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 19ஆவதாக இடம் பெற்றுள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கணி தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியது.

திமுகவின் கோட்டை
கடந்த 1977 முதல் தற்போதுவரை திமுகவின் கோட்டையாக உள்ள இந்த தொகுதியில் அரசின் எந்த நலத்திட்டமாக இருந்தாலும் தொய்வில்லாமல் சென்று சேர்ந்துவிடும். அதேபோல், எந்த நலத்திட்டங்கள் கொண்டு வந்தாலும் துணை முதலமைச்சர் உதயநிதி முதலில் பிள்ளையார்சுழி போடுவது சேப்பாக்கம் -திருவல்லிக்கணி தொகுதியில் தான். தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகைகளாக இருந்தாலும் திமுக சார்பில் வழங்கப்படும் பொருட்கள் ஒரு வீடு தவறாமல் ஆஜராகி விடுமாம். அதேபோல், உனக்கு வரவில்லை எனக்கு வரவில்லை என யாரும் முணுமுணுக்க விடாத அளவுக்கு கட்சி நிர்வாகிகள் கவனித்துக் கொள்வார்களாம். பெரியவர்களை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்ளாமல் வருங்கால வாக்காளர்களான சிறுவர், சிறுமிகளுக்கும் நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் என வழங்குவதோடு அங்குள்ள துப்புரவு பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் துணை முதலமைச்சரின் செல்லத்தொகுதி என்றுகூட சொல்லலாம்.

செல்ல தொகுதி சேப்பாக்கம்
இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம், குத்துச்சண்டை உள்விளையாட்டு அரங்கம், சக்கர சறுக்கு விளையாட்டு பகுதி, கால்பந்து திடல், கையுந்து பந்து திடல், பார்வையாளர் மாடம், கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்கு வலைகூடத்துடன் கூடிய விளையாட்டுத்திடல், சாலையோர கழிவு நீர் உந்து நிலையம், பள்ளிக் கட்டிடம், கல்லூரிகளில் அருங்காட்சியம், பல்நோக்குக் கட்டடம், நவீன உடற் பயிற்சிக் கூடம், நியாய விலைக்கடைகள், அறிவியல் ஆய்வகங்கள், அரசு பணியாளர் குடியிருப்புகள், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சமூக மகப்பேறியல் நிலையம், தாய் -சேய் நல மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம், மகளிர் சுய உதவி குழுவினருக்கு ”மகிழ் கஃபே” கடைகள், முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், பாதாள சாக்கடை திட்டம் என பல்வேறு நலத்திட்டங்கள் சேப்பாக்கம் -திருவல்லிக்கணி தொகுதியில் செய்யப்பட்டுள்ளன.

வரலாற்று வெற்றி பதிவாகும்
இப்படிப்பட்ட சூழலில் வரும் சட்டமன்ற தேர்தலில் 2ஆவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அண்ணா நகர் திமுக வேட்பாளர் சிற்றரசு, திமுக மாநில ஊடகப்பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, ரோடு ஷோ நடத்திய உதயநிதிக்கு பொதுமக்கள் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

வேட்புமனு தாக்கல் முடிந்து பிரச்சார வாகனத்தில் நின்றபடியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர், சென்னை என்றாலே திமுகவின் கோட்டை தான், அதிலும் கடந்த 5 ஆண்டுகளாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்களோடு தான் பயணித்துள்ளதாகவும், அதனால் இந்த தேர்தலில் வரலாற்று வெற்றி பதிவாகும் என்றும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved