Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 01:36 PM
By: Manigandan Raja

இன்டேன் சிலிண்டர் குடோனில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவில்லை :
திருச்சுழி சாலையில் அமைந்துள்ள இன்டேன் சிலிண்டர் குடோனில் கடந்த சில நாட்களாக போதிய அளவில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முன்பதிவு (புக்கிங்) செய்திருந்த போதிலும் பல நாட்களாக சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்ததால்.
நூற்றுக்கணக்கான மக்கள் தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள இண்டேன் கேஸ் குடோனை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. பின்னர் அவர்கள் திருச்சுழி
சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
மேலும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூ. 1500 வரை வீட்டு உபயோக சிலிண்டர்களும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் ரூ.4000 வரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும், முறையான விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரியாபட்டி போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து செல்ல வைத்தனர். மேலும் கடந்த வாரம் இதே போன்று சிலிண்டர் தட்டுபாட்டால் காரியாபட்டி முக்குரோடு பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காரியபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது பொதுமக்களின் தொடர் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved