Also Watch
Read this
By: Manigandan Raja

குழந்தைக்கு உரிய சிகிச்சை இல்லை :
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கு அதிக காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட்டும், மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
மானாமதுரையை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததிலிருந்தே அதிக காய்ச்சலால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்களிடம் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் முறையாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவில்லை என்றும், குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பின்னர் குழந்தைக்கு மஞ்சள் காமாலை அறிகுறிகளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
அப்போது தாய் மற்றும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி செவிலியர்களிடம் கேட்டபோது, “குழந்தையை மட்டும் அழைத்து செல்லுங்கள், தாயாரை அனுப்ப முடியாது” என பணியில்
இருந்த செவிலியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உறவினர்கள் குழந்தையை மட்டும் அழைத்து சென்று மானாமதுரையில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

இதற்கிடையில், குழந்தையின் தாயார் நந்தினிக்கு போடப்பட்டிருந்த தையலை பிரிக்கும் போது கடுமையான வலி ஏற்பட்டதாகவும், அதனால் அவர் அலறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த செவிலியர் நந்தினியை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பணியில் இருந்த செவிலியர் இங்கு என்ன "கூத்தா" நடக்கிறது என தகாத வார்த்தையில் வருத்தெடுத்துள்ளார். மேலும் தையலை முழுமையாக பிரிக்காமல் செவிலியர் அங்கிருந்து சென்றதாகவும்
தெரிவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் பணியில் இருந்த சில செவிலியர்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் அவதூறாகவும் மரியாதைக்குறைவாகவும் பேசியதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
அத்துடன் மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகள் சுத்தமின்றி காணப்படுவதாகவும், இதனால் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை கிடைக்காமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்த சம்பவம் மானாமதுரை மக்களிடம் மிகுந்த
பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட நாட்களாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் பல பிரச்சினைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved