தொழில்துறையில் உலகை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், “AeroDefCon 2025” என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலகை ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. உற்பத்தி துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகம் நடத்தும் மாநாடு தான் உலக அளவில் பேசப்படுகி்றது. இந்தியாவின் வாகன உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 40 சதவீதம். 3ல் இரண்டு பங்கு மின்னணு டூவீலர் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் மின்னணு பொருள் ஏற்றுமதியில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. புதிய தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறிந்து புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக இந்த மாநாடு திகழ்கிறது. விண்வெளி, பாதுகாப்புத் தொழில் சர்வதேச மாநாடு தமிழகத்தில் தான் முதல்முறையாக நடக்கிறது. உலக அளவில் வளரும் பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகம் அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்ததோடு, உற்பத்தி துறையின் ’லீடர்’ ஆக மாறி வருகிறது. அனைத்து விதமான வளர்ந்து வரும் தொழில்களை கொண்ட மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குவதன் அடையாளம் தான் இந்த மாநாடு.தமிழகத்தில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. எதை செய்தாலும் ஆல்-ரவுண்டாக, பெஸ்ட் ஆக செய்வதால் தான் இது சாத்தியம். இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்.பாதுகாப்பு துறையின் முக்கிய மையமாக தமிழகம் மாறும் என்று நம்புகிறேன். உயர்தர ஜெட் இன்ஜின் பாகங்களில் இருந்து டிரோன் உற்பத்தி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.