Also Watch
Read this
By: Manigandan Raja
மக்கள் பணத்தில் செயல்படும் மக்களுக்கான நிறுவனத்திலோ யார் தவறு செய்தாலும் அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கை இருக்கும் என்று, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறி உள்ளார்.
ரூ.4 லட்சம் நிவாரண உதவி
உசிலம்பட்டி, ஏழுமலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தோருக்கு நான்கு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேகதாதுவில் அணை விவகாரம்
எந்த காலத்திலும் நமது முதல்வர் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டார். அதற்கு தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுப்போம்.
தேவையற்ற தகராறு
திமுகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் அழுத்தத்தில் உள்ளனர். ஐந்து வருடமாக, மக்கள் விரோத செயல்களை செய்ததால் தான் மக்கள் அவர்களுக்கு பதிலை கொடுத்தனர். இப்போது எங்களுடன் உள்ள கூட்டணி கட்சியினருடன் பிரச்சனை செய்து தேவையில்லாத தகராறு செய்து, இன்றைக்கும் திமுகவினர் மக்கள் விரோத செயல்களை தான் செய்து வருகிறார்கள். அரசுக்கு எந்த வகையிலாவது குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு இது தெரியும். அனைத்தும் களை எடுக்கப்பட்டு மக்களுக்கான செயல்பாடுகளை மட்டும் நோக்கமாக கொண்டு வேலைகள் தொடங்கும்.

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை குறித்து, நாங்கள் பேச வேண்டியதில்லை. தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டு ராஜினாமா செய்தால், அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு காரணமாக ராஜினாமா செய்து விட்டு வருபவர்கள், அவர்களின் தனிப்பட்ட விருப்பம். சேர்பவர்களை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

மின்துறை ஊழல் குற்றச்சாட்டு
எங்கெல்லாம் ஊழல் நடைபெற்றதோ, அங்கெல்லாம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சனைகளை கண்டறிந்து சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே டிரான்ஸ்பார்மர் ஊழல், சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, எடுக்கப்படும். மக்கள் பணத்தில் மக்களுக்கான நிறுவனத்திலோ யார் தவறு செய்தாலும் அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கை இருக்கும்.

விதிமீறல்கள், நடவடிக்கை உறுதி
சட்டக் கல்லூரிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனம், மாவட்ட வழக்கறிஞர் நியமனம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. சட்ட ஆணையம் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டி உள்ளது. அரசு சட்டக் கல்லூரி மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில், விதி மீறல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அரசு இடங்களையும் அவர்களை நிரப்பியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved