Also Watch
Read this
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழக வெற்றி கழகம், தற்பொழுது ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அதே அருணுக்கு பவர்ஃபுல்லான பதவியை ஒதுக்கி இருப்பது அவரது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள காரணங்களையும் முதலமைச்சர் விஜயின் வியூகத்தையும் பார்க்கலாம்.

அருண் ஐபிஎஸ் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில், தவெக ஆட்சியமைந்த பிறகு, எத்தனையோ அதிகாரிகள் மாற்றம் நடந்திருந்தாலும், அருண் ஐபிஎஸ் பணியிட மாற்றம் மட்டும் அனைத்து தரப்பினரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு வரை அருண் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தவெக முன்வைத்திருந்தாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு பவர்ஃபுல்லான பதவியை தந்தது எப்படி? என்பதே பலரின் பில்லியன் டாலர் கேள்வியாக முன் நிற்கிறது. ஆனால், அதன் பின்னணியை ஆராயும் போது மிரளவைக்கும் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
லஞ்சம், ஊழல்...
தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் அதனை தாம் ஆட்சிக்கு வந்தால் முற்றாக ஒழிப்பேன் எனக் கூறி அரியணை ஏறினார் ஜோசப் விஜய். சொன்னபடியே ஆட்சிக்கும் வந்த அவர், எப்படி லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க போகிறார் என மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த சமயத்தில் தான், லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்யை நியமித்து அதிரடி காட்டினார் விஜய். என்னதான் தேர்தலுக்கு முன்பு அருணின் செயல்பாடுகளில் முரண்பட்டாலும், அவரது நேர்மையையும், செயல்பாட்டையும் நம்பி மிகப்பெரிய பொறுப்பை முதல்வர் தந்திருப்பதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சேலத்தை சேர்ந்தவர்
சேலத்தை பூர்வீகமாக கொண்ட அருண், இன்ஜினியரிங் படித்திருந்தாலும் காவல்துறையின் மீதுள்ள நாட்டத்தால் 1998ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு காவல்துறையில் காலடி எடுத்துவைத்தார். முதல் போஸ்ட்டிங்கே நாங்குநேரியில் இருந்ததால், பெரும் சவால்களை எதிர்கொண்டார் அருண். காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த போது, பல சாதிய மோதல்களை தடுத்து திறம்பட செயல்பட்டார். அதைப்போலவே தூத்துக்குடியிலும் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தி பலரும் மெச்சிப் பேசும் அளவுக்கு செயல்பட்ட அருணுக்கு எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. அதன்பின்னர் கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காவல்கண்காணிப்பாளாராக பணியாற்றிய அருண், குற்றங்களை குறைப்பதற்கு தனக்கே உரிய பாணியில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார். இதன் காரணமாகவே, எந்த ஆட்சி அமைந்தாலும் அவருக்கான முக்கியத்துவம் என்பது இம்மியளவும் குறையாமல் இருந்து வந்தது.

சென்னையில் அருண்
மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெற்ற அனுபவங்களோடு தலைநகர் சென்னைக்கு மாற்றலாகிய அருண், தலைநகரின் முக்கிய பகுதியான அண்ணாநகரின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியது, சிசிடிவி காமராக்களை பொது இடங்களில் பொருத்தியது என குற்றச் செயல்களை தடுப்பதற்கான சாட்டையை சுழற்றினார். தொடர்ந்து, பரங்கிமலை துணை ஆணையராகவும் அருண் பணியாற்றி இருந்தார். தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராக சார்ஜ் எடுத்துக் கொண்ட அருண், 2012ஆம் ஆண்டில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

நேர்மைக்கு பரிசு
அடுத்தடுத்து முக்கிய பணியிடங்களை அடைந்த அருண், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார். குறிப்பாக 2021ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண், மாவட்டத்தில் கொடி கட்டிப் பறந்த லாட்டரியை ஒழிக்க பெரும் தலைகளை கைது செய்து, காக்கி வட்டாரத்தையே புருவம் உயர்த்த வைத்தார். குடிமைப் பொருள் வழங்கல் பிரிவில் பணியாற்றியபோது, ரேசன் பொருட்கள் கடத்தலை இரும்பு கரம் கொண்டு அடக்கி அசத்தினார். ஆவடி காவல் ஆணையர், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி என தனது நேர்மைக்கு பரிசாக தொடர்ந்து அடுத்தடுத்த பதவிகளை அடைந்தார்.

சென்னையில் என்கவுன்டர்
இந்நிலையில் தான், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பவம் சென்னையின் சட்டம் ஒழுங்கை கேள்விக் குறியாக்கியது. ஆள் நடமாட்டமுள்ள பகுதியில் முக்கிய தலைவர் ஒருவரை ரவுடிக் கும்பல் வெட்டியது, பொதுமக்களை நடுநடுங்க வைத்தது. அந்த சமயத்தில் தான், சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். அருணின் நியமனம் பல ரவுடிகளின் வயிற்றில் புளியை கரைத்தது என்றே சொல்லலாம். எங்கெல்லாம் பணியமர்த்தப்படுகிறாரோ அங்கெல்லாம் ரவுடியிசத்துக்கு முடிவுரை எழுதிய அருணின் தலைமையில், சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்ற கையோடு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தது பரம்பரை ரவுடிகளை நடுநடுங்க வைத்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக...
அடுத்தடுத்த நிகழ்த்தப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவத்தில் சென்னையில் மீண்டும் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வந்தது. ஆட்சி மாற்றத்தால் முதலில் குறிவைக்கப்படும் நபர் என கணிக்கப்பட்ட அருணுக்கு, மீண்டும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. பலகட்ட ஆய்வுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பிறகே அருணை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக முதலமைச்சர் நியமித்ததாக சொல்லப்படுகிறது. அருணின் நியமனம் ஊழல் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் வியர்க்க வைத்திருக்கிறது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக...
இத்தனை நாட்களாக ரவுடிகளுக்கும் மாஃபியாக்களுக்கும் எதிராக சுழற்றிய அருணின் சாட்டை, இனி கட்சி சார்பற்று ஊழல்வாதிகளுக்கு எதிராக சுழலும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்காது என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் முரளி...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved