Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 02:34 PM
By: Manigandan Raja

பராமரிப்பின்றி இருப்பதாக புகார் :
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவமனை 64 வருடமாக செயல்பட்டு வருகிறது.1962 ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் இந்தக் கால்நடை மருத்துவமனை கொண்டுவரப்பட்டது.
வள்ளியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்று வந்தது.இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் தங்களது ஆடு, மாடு கோழிகளை பராமரித்தும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு பயனடைந்தனர்.
தற்போது சுமார் ஒரு ஏக்கர் அளவு பரப்பளவு கொண்ட இந்த கால்நடை மருத்துவமனை வளாகம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது.வள்ளியூர் பேருந்து நிலையம் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் பேருந்து நிலையத்தின் கட்டிடக் கழிவுகள் அனைத்தும் இந்த மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்பட்டுள்ளன.
மேலும் பேரூராட்சி நிர்வாகம் தங்களது குப்பை சேகரிக்கும் வாகனங்களை இங்கே நிறுத்தி வைத்து மருத்துவமனை வளாகத்தையே ஒரு வாகன நிறுத்துமிடமாகவும் குப்பைக் கூடங்களாகவும் மாற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளது.மேலும் போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் வாரத்தில் பல நாட்கள் மருத்துவமனை பூட்டியே கிடப்பதாக கூறப்படுகிறது.
இதனால், தொலைதூரக் கிராமங்களில் இருந்து மாடுகளை ஓட்டி வரும் விவசாயிகள் சிகிச்சையளிக்க முடியாமல் தவிப்பதோடு, மாடுகளைக் கட்டக்கூட இடமில்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என கூறப்படுகிறது.
இது குறித்து வள்ளியூரைச் சேர்ந்த கல்யாணி என்பவர் கூறும்போது"வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மருத்துவமனையை அரசு உடனடியாகப் புனரமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளையும், குப்பை வண்டிகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி, போதிய மருத்துவர்களையும் ஊழியர்களையும் நியமித்து தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved