Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 02:02 PM
By: Manigandan Raja

உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை :
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூர் செட்டியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்தக் கடையை உடனடியாக அகற்றக் கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செட்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த மதுபானக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள், மது அருந்திவிட்டு காலிப் பாட்டில்களை அருகில் உள்ள விவசாய நிலங்களில் உடைத்து எறிவதையும், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும்
கழிவுகளை அங்கேயே கொட்டிச் செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதனால் விளைநிலங்களின் தரம் பாதிக்கப்படுவதோடு, விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் காயமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கடையின் எதிரே உள்ள பாசனக் கால்வாய் வழியாக பாரூர் பெரிய ஏரியிலிருந்து 12 ஏரிகளுக்குத் தண்ணீர் செல்கிறது.
இந்தக் கால்வாயில் மது பாட்டில்களை உடைத்துப் போடுவதால் நீரோட்டம் தடைபடுவதோடு, விவசாயத்திற்குப் பயன்படும் தண்ணீரும் மாசுபடுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக எச்சரிக்கைப் பலகை வைத்தும், மதுப்பிரியர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் அத்துமீறி வருகின்றனர்.
மது அருந்துபவர்கள் அருகே உள்ள தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து, மரங்களில் உள்ள இளநீர்களைப் பறித்து மதுவுடன் கலந்து குடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாகவும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்தக் கடையை அகற்றக்கோரி நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், "அரசம்பட்டி சென்னை விவசாயிகள் சங்கம்" சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில்.
விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved