Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 01:19 PM
By: Manigandan Raja

சில நாட்களிலேயே பழுது என குற்றச்சாட்டு :
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட திண்டுக்கல் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட், அரசு மருத்துவமனை, காவல் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் என எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் அமைந்துள்ளன.
இந்தப் பகுதியில் சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்தது. இதனை ஏற்று, சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு, அப்போதைய அமைச்சராக இருந்த சக்கரபாணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், திறக்கப்பட்டுச் சில காலத்திலேயே இந்தப் பாலம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளித்தாலும், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக, இதில் பொருத்தப்பட்டுள்ள எஸ்கலேட்டர் வசதி தற்போது செயல்பாட்டில் இல்லை.
பராமரிப்பு இன்றி முடங்கிக் கிடக்கும் இந்த எஸ்கலேட்டர், தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாலத்தைப் பயன்படுத்த முடியாமல், மீண்டும் ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த நடைமேம்பாலத்தை முறையாகப் பராமரித்து, எஸ்கலேட்டர் வசதியை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved