சென்னை கத்திப்பாரா பகுதியில் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜை போலீஸார் கைது செய்தனர். நடிகர் பாபி சிம்ஹாவின் வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் பாபி சிம்ஹாவின் தந்தையை நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறக்கி விட்ட ஓட்டுநர் புஷ்பராஜ், திரும்பும் வழியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் காரை ஓட்டி சென்றபோது கட்டுபாட்டை இழந்து ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியதில் பெண் உட்பட மூவர் காயம் அடைந்தனர். 6 வாகனங்கள் சேதமடைந்தன. காயமடைந்தவர் அளித்த புகாரில் பாபி சிம்ஹாவின் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.