Also Watch
Read this
By: Manigandan Raja

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தை சின்ன பேலகொண்டப்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் வழிமறித்து, ஓட்டுநர் முருகன் மற்றும் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை தடுக்க முயன்ற மற்றொரு அரசு பேருந்து ஓட்டுநர் பெருமாளையும் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர்கள் முருகன் மற்றும் பெருமாள் ஆகியோர் தற்போது ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து தேன்கனிக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகளின் சார்பில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டமாக ஓசூர், தர்மபுரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து எந்த பேருந்தும் இயக்கப்படாது என அனைத்து கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மத்திகிரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கனகராஜ் மற்றும் ஜெகதீசன்
ஆகிய இருவரையும் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்த காவல்துறையினர், அவர்களை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அனுப்பியுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் விஜயகுமார் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், ஓட்டுநர் முருகனை விஜயகுமார் என்பவர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved