Also Watch
Read this
நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் தனது அணுகுமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரசின் அணுகுமுறை, திமுகவை பலவீனம் அடையச் செய்திருப்பதாகவும் மேற்குவங்கம், கேரளாவிலும் திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை பலவீனம் அடையச் செய்திருப்பதாகவும் திருமாவளவன் கூறி உள்ளார்.
இந்தியா கூட்டணி ஆலோசனை
இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை திமுக புறக்கணித்த நிலையில், விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரி கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், திமுக கூட்டணியிலிருந்த கட்சிகள் தவெக பக்கம் சாய்ந்தன. இதில் காங்கிரஸின் செயல்பாடுதான் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

திமுகவின் அதிருப்தி
திமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் எல்லாம், திமுக தலைமையை கலந்து ஆலோசித்த பின்னர் தான் கூட்டணி முறிவை அறிவித்தன. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைமை அப்படி எந்த ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை. இதனால், திமுக கடும் அதிருப்தி அடைந்தது. எனவே தான், டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.

திருமாவளவன் கருத்து என்ன?
இந்த நிலையில், திருமாவளவன் கூறி இருப்பதாவது;
பாஜக அரசு கல்வித் துறையைக் கையாண்ட விதம் இந்திய மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரும் ஆபத்தில் தள்ளி உள்ளது. நாடு முழுவதும் அடுத்தடுத்து நடந்த வினாத்தாள் கசிவு, முறைகேடு காரணமாகப் பல முக்கியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், எவ்விதப் பதிலும் கூறாமல் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்
சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கையாண்ட தேர்தல் வியூகம், இந்தியா கூட்டணியின் வலுவான தூண்களாக இருக்கும் பிராந்தியக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி உள்ளது. கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் எடுத்த தன்னிச்சையான முடிவுகள் இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உகந்தது அல்ல என்பதால், காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved