Also Watch
Read this
By: Manigandan Raja

"அமெரிக்காவை தாக்கும் ஏவுகணைகளையும் ஈரான் தயாரிக்கும்" :
ஐரோப்பாவின் தொலைதூர பகுதிகளையும் தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஈரான் உருவாக்கியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரான் சமீபத்தில் ஏவிய ஏவுகணைகள் தங்களின் எதிர்பார்ப்புகளையும் மீறிய திறன்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஏவுகணைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளை அடையக் கூடியவை எனவும், எதிர்காலத்தில் அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பையும் குறிவைக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்க ஈரான் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.'
"போர்நிறுத்தம் கோரியதாக ட்ரம்ப் கூறியது பொய்யானது" :
அமெரிக்கா தண்டிக்கப்பட்டு, ஈரானுக்கு உரிய இழப்பீடு முழுவதும் வழங்கப்படும் வரை போர் தொடரும் என டிரம்ப்புக்கு ஈரான் அரசு பதிலடி கொடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியதாக டிரம்ப் கூறியது பொய்யானது எனவும், ஆதாரமற்றவை எனவும் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் புதிய தலைவர் அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியதாகவும், ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக திறக்கப்பட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்வதாகவும் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
பிரிட்டன் தலைமையில் "ஹோர்முஸ்" பாதுகாப்பு உச்சி மாநாடு :
பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு நடத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்து மீண்டும்.

இயல்புநிலைக்கு திரும்ப ஒருங்கிணைந்து செயல்பட 35 நாடுகளிடையே ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனின் இந்த முன்னெடுப்பில் சர்வதேச அளவில் தூதரக ரீதியிலான மாநாடு, இந்த வாரத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தீவிர முயற்சி :
53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். நிலவில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஒரு பயிற்சி மையமாக நிலவை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

எனவே, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் "ஆர்டெமிஸ்-2" திட்டத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த திட்டத்தில், 3 அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஒரு கனடா வீரரும் நிலவை நோக்கி பயணிக்கின்றனர். இந்த 10 நாள் பயணம் நிலவை சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்பும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved