Also Watch
Read this
By: Manigandan Raja

ஐரோப்பிய நாடுகள் ஜெர்மன் மொழி பேசி கொண்டிருக்கும் :
2-ஆம் உலக போரின்போது அமெரிக்கா மட்டும் உதவி செய்யாமல் இருந்திருந்தால், ஐரோப்பிய நாடுகள் தற்போது ஜெர்மன் மொழி பேசி கொண்டிருக்கும் என அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, பிரிட்டிஷ் மட்டும் வட அமெரிக்காவில் பிரஞ்சுக்காரர்களை தடுக்காமல் இருந்திருந்தால் இப்போது பிரஞ்சு மொழி பேசி கொண்டிருப்பீர்கள் என அரசர் சார்லஸ் நகைச்சுவையாக பதிலடி கொடுத்தார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அரசர் 3-ஆம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு கௌரவ விருந்து அளிக்கப்பட்டபோது நகைச்சுவையாக நடந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீரர்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பாராட்டு :

ரஷ்யாவில், உக்ரேனியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டபோது, தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட வீரர்களை, வடகொரிய தலைவர் கிம்-ஜாங்-உன் பாராட்டியுள்ளார். குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யப் படைகளுடன் சண்டையிட வடகொரியா 14 ஆயிரம் வீரர்களை அனுப்பியது.
போரின் போது 6 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், "பெரும் மானத்தைக் காப்பதற்காக, எவ்விதத் தயக்கமுமின்றித் தற்கொலை என்னும் பாதையைத் தேர்ந்தெடுத்த வீரர்களை "ஹீரோக்கள்" என்றும், தப்பி பிழைத்தவர்கள், "தேசபக்தர்கள்" என்றும் கிம் ஜாங் உன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு :

"இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு" என பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ((Christopher Luxon)) விவரித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தனது X தளத்தில் வெளியிட்ட வீடியோவில், இந்த ஒப்பந்தம் நியூசிலாந்து மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன், ஊதியமும் உயரும் என்று பதிவிட்டுள்ளார்.
மீண்டும் வெடித்து சிதறியது பிரபலமான கிலாவியா எரிமலை :

உலகிலேயே மிகவும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் ஒன்றான அமெரிக்காவின் கிலாவியா எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது..! ஹவாய் தீவில் உள்ள இந்த எரிமலை 2024-ம் ஆண்டு முதல் அடிக்கடி வெடித்து வருகிறது.
தற்போது தரை மட்டத்தில் இருந்து ஆயிரத்து 150 அடி, அதாவது ஈபிள் கோபுரத்தை விட உயரமான அளவுக்கு தீக்குழம்பு பீறிட்டு எழுந்தன. இதனால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், எரிமலையின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது.
மட்டக்களப்பு மாநகர சபை சார்பில் பட்டத் திருவிழா :
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பில் நடைபெற்ற பட்டத்திருவிழாவில் வண்ண வண்ண பட்டங்கள் போட்டி போட்டு பறந்தன. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக மட்டக்களப்பு மாநகர சபை சார்பில் பட்டத் திருவிழா நடைபெற்றது.
இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து பட்டத்திருவிழாவை கண்டு களித்தனர். மேலும், பட்டங்கள் போட்டி போட்டு பறந்து வானில் வட்டமிடுவது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved