Also Watch
Read this
By: Manigandan Raja

தந்தையான மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சூர்யகுமார் யாதவ் :
தந்தையான மகிழ்ச்சியில் இருக்கும் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மும்பை விமான நிலையத்தில் தன்னை படம்பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு இனிப்புகளை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 2016-ல் திருமணம் செய்த சூர்யகுமார் யாதவ் - தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு, கடந்த 7-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
வீரர்கள் - கிரிக்கெட் வாரியம் இடையே கருத்து வேறுபாடு :
ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கும் - கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளி நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்க NOC வழங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கறார் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால், மூத்த வீரர்கள் 5 பேர் வருடாந்திர ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திட வில்லை என கூறப்படுகிறது.
ஐபிஎல் சீசனில் மோசமான வரலாற்றை பெற்ற ராஜஸ்தான் அணி :

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த அணி என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் அணி பெற்றுள்ளது. அதாவது, ஐபிஎல் சீசன்களில் 7 முறை 200-க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக் கொடுத்த முதல் அணி என்ற பரிதாப நிலைக்கு ராஜஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 229 ரன்களை குவித்தது.
ஐபிஎல் அறிமுக போட்டியில் மிகவும் பதற்றமடைந்தேன் :

ஐபிஎல் அறிமுக போட்டியில் சச்சினின் ஆலோசனை பெரிதும் உதவியதாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா தெரிவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது, எதிரில் இருப்பவரின் பெயரை பார்க்காமல் பேட்ஸ்மேன் என்று மட்டும் கருதி பந்து வீசுமாறு சச்சின் கூறியதாகவும், அடுத்த பந்திலேயே கோலியை அவுட் ஆக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள், டி-20 கேப்டன் :

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான கேப்டனாக குசல் மெண்டிஸ் விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் முதல் குசல் மெண்டிஸ் தலைமையின் கீழ் இலங்கை அணி இயங்கும் எனவும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக தனஞ்ஜெயா டி சில்வா தொடர்வார் எனவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved