கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்தோரின் குடும்பத்தினரை, வீடியோ காலில் அழைத்து, த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல் கூறி உள்ளார். கரூரில் கடந்த செப்.27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய், பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதன்முறையாக தவெக நிர்வாகிகள் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். இந்நிலையில், நேற்று மாலை தவெக தலைவர் விஜய், உயிரிழந்தோரில் இருவரின் குடும்பத்தினருடன், வீடியோ காலில் பேசி, ஆறுதல் கூறி உள்ளார். கரூர் காந்தி கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த தனுஷ்குமாரின் தாய், சகோதரியுடன் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளார். இதனை தனுஷ்குமாரின் உறவினர் உறுதி செய்துள்ளார். விஜய் பேசும்போது, “நான் உங்களுக்கு சகோதரனாக இருந்து அனைத்து உதவிகளும் செய்வேன். விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேபோல், ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேலிடம், விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். இவ்வாறு பேசும் போது, விஜய் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் ஒவ்வொருவரின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசுவார் என்று, தவெக நிர்வாகிகள், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று தகவல் கூறி வருகின்றனர்.