Also Watch
Read this
By: Web Team

ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று, தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
கேரள மாநிலம், கொச்சியில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாக, நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், கொச்சியில் உள்ள ஒரு மதுபாரில் நடிகை லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளன. நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு காரை, நடு ரோட்டில் நிறுத்தி அந்த காரில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவரை காரில் இருந்து இழுத்துச் சென்று தங்கள் காரில் ஏற்றி, கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்டு காருக்குள் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடத்தல், அடித்து சித்ரவதை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கும் பதிவானது.
குற்றம் சாட்டப்பட்ட மிதுன், அனீஷ் மற்றும் சோனா மோல் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனையும் கைது செய்ய போலீசார் முயன்ற நிலையில், செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன், கேரள உயர்நீதிமன்றத்தில், முன் ஜாமின் மனுவை தாக்கல் செய்தார்.

தனது மனுவில், ‘தாக்குதல் வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்பதால், தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும்’ என கோரி இருந்தார்.
இதனையடுத்து, ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது கேரள உயர்நீதிமன்றம். செப்டம்பர் 17ஆம் தேதி வரை அவரை கைது செய்யவும் தடை விதித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved