Also Watch
Read this
By: Manigandan Raja

மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தகவல் :
மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கத்தால் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெப்பத்தின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாகவும், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை வெப்பத்தாக்கத்தால் 39 நேரடி பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் 12 நாடுகளுடன் தடையற்ற ஒப்பந்த பேச்சுவார்த்தை :

கனடா, இஸ்ரேல், பிரேஸில் உள்பட மேலும் 12 நாடுகள் மற்றும் கூட்டமைப்புகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தயாராகி வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிலி, பெரு, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷியாவுடனும் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
மும்பையில் போதை பொருள் கடத்தல் மன்னன் முகமது சலீம் :
நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான போதை பொருள் கடத்தல் மன்னன் முகமது சலீம் டோலா, மும்பையிலுள்ள போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்ட அவர், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 2 நாட்கள் இடைக்கால காவல் வழங்கப்பட்டது.
ஜெய்சங்கருடன் தொடர்புகொண்ட ஈரான் அமைச்சர் அராக்சி :

ஈரான் அமைச்சர் அராக்சியிடம் இருந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு செல்போன் அழைப்பு வந்ததாகவும், இருநாட்டு அமைச்சர்களுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தம் குறித்தும், வளைகுடா போர் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக டெல்லி ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் :
மேற்காசிய போர் காரணமாக, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல, வர்த்தகம் மற்றும் நிதி முதலீடும் பாதிக்கப்படக்கூடும் எனவும், எனினும் இந்தியாவில் உள்ள வலுவான உள்நாட்டு தேவை, உறுதியான கொள்கை, நிதி அமைப்பு, தொடரும் பொதுமக்களின் முதலீடு ஆகியவை பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved