Also Watch
Read this
By: Manigandan Raja

திடீர் மாரடைப்பால் ஏர் இந்தியா விமானி உயிரிழப்பு :
இந்தோனேசியாவில் திடீர் மாரடைப்பு காரணமாக ஏர் இந்தியா விமானி உயிரிழந்தார். டெல்லியில் இருந்து பாலி தீவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் ஹோட்டல் அறையில் ஓய்வெடுத்தபோது, 40 வயதான விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சக ஊழியர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தபோது, விமானி ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது.
ஈரான் போருக்காக அமெரிக்கா 25 பில்லியன் டாலர் செலவு :

ஈரான் போருக்காக அமெரிக்கா இதுவரை 25 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக என்று பென்டகனின் நிதிநிலை அறிக்கை தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் முன்பு பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் இணைந்து அவர் சமர்பித்த அறிக்கையில், பென்டகனின் தற்காலிக கணக்காய்வாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் இந்த தொகையை முன்வைத்துள்ளார்.
ஈரானின் புதிய முன்மொழிவை நிராகரித்த டிரம்ப் :

அணுசக்தி திட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பு தொடர்பான ஈரான் புதிய முன்மொழிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமல் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என தெரிவித்துள்ள அவர், ஹோர்முஸ் முற்றுகையை தொடர்ந்து நீட்டிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் மோதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் மனித புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம் :
இலங்கையில் உள்ளூர் நீதிமன்ற உத்தரவுப்படி, யாழ்பாணம் செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனித புதைகுழி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக மொத்தம் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்ட நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த செப்டம்பரில் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இலங்கை ரூபாய் மதிப்பில் 21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மே 14-ல் இந்தியா வருகை :

டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கலந்து கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக, மே 14-ம் தேதி 2 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வரும் அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிப்பார் என தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் :
ஹோர்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்திற்குரியது எனவும், தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தி உள்ளது. கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்திய துணை தூதர் யோஜ்னா படேல், ராணுவ நடவடிக்கைகளின்போது வணிக கப்பல்களை குறிவைக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved