Also Watch
Read this
By: Manigandan Raja

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் :
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அகர ஆலம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி கிராமங்களான கோட்டி மூலை, சிறுவரப்பூர், ஓட்டிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகள் இருந்து வருகின்றன. இப்பகுதிகள் வெள்ளாற்று கரையோர பகுதி கிராமங்களாக இருப்பதால் நல்ல மண்வளமும், நீர் ஆதாரமும் இருந்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் அகர ஆலம்பாடி கிராமத்தில் விவசாயிகள் பலர் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். அனைவராலும் விரும்பப்படும் பவானி கத்தரிக்காய் எனப்படும் கத்திரிக்காயை விவசாயம் செய்திருந்தாலும், இதிலிருந்து கிடைக்கும் கத்திரிக்காய் அனைத்து தரப்பினராலும் விரும்பி வாங்கப்படுவதாகவும் எளிதில் விற்க முடிவதாக குறிப்பிடுகின்றனர்.
கத்திரிக்காய் கூலி ஆட்களை வைத்து பறித்து சேத்தியாத்தோப்பு வார சந்தை மற்றும் வடலூர் பகுதிகளில் நடக்கும் சந்தை வியாபாரிகளிடம் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் என்று விலையில் விற்பனை செய்வதாக கூறும் விவசாயிகள் இதனை வாங்கி விற்கும் போது பொதுமக்களுக்கு நடைமுறை செலவினங்களை கருத்தில் கொண்டு சற்று கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கத்திரிக்காய் ரகங்களில் நூற்றுக்கணக்கான அளவில் பல்வேறு ரகங்கள் இருந்தாலும் பவானி கத்திரிக்காய் என்பது விவசாயிகளின் தனி அடையாளமாகவும், இதனை பொதுமக்களும் கேட்டு வாங்கி செல்வதாகவும் இருக்கிறது.
உணவு சமைத்தலில் அனைத்து நிலைகளிலும் கத்திரிக்காய் இல்லாமல் உணவு சமைக்க முடியாத நிலை இருப்பது என்பதே உண்மை. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கத்திரிக்காய் தற்போது இப்பகுதி விவசாயிகளை நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கி நிலைகுலைய செய்துள்ளது.
எத்தனையோ விதமான இயற்கை முறைகளான மருந்துகள் மற்றும் பல்வேறு நோய் தடுப்பு முறைகளை கையாண்டும் கரையான் நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு கத்திரிக்காய் சாகுபடி விவசாயிகளை வேதனையின் உச்சத்திற்கே ஆளாக்கி வருகிறது.
இப்பகுதி நல்ல மண் வளம் மிக்கதாக இருந்தாலும் நோய் தாக்குதல் அதையெல்லாம் மீறி கத்திரி செடிகளை பாதித்து மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. தங்களுக்கு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த துறை சார்ந்த
அதிகாரிகள் ஆய்வு செய்து சரியான வழிமுறைகளை தங்களுக்கு வழங்கினால் தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் விவசாயிகள் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved