வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய மக்கள் தீர்மானித்திருப்பதாக, என்.டி.ஏ. பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி தெரிவித்தார்.திருச்சியில் என்டிஏ பொதுக்கூட்டம் திருச்சியில், நடைபெற்ற தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழகத்தில், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று உள்ளேன். காசி தமிழ் சங்கத்திலும் பங்கேற்றேன். ஆகையால், தமிழ் மக்களின், தமிழகத்தின் நாடித் துடிப்பை என்னால் தெளிவாக கணக்கிட முடியும். ஆடி மாதத்தில் காவிரி நதி தீவிர சக்தியோடு பயணிக்கிறாள். அதேபோல, தமிழ்நாட்டின் இந்த தேர்தல் காலத்திலும் கூட மாற்றத்துக்கான ஆசை, பெரும் வேகத்தை நோக்கி பயணிக்கிறது. ஆட்சி, அதிகாரத்தில் இருந்து திமுகவை தூக்கி எறிய மொத்த மாநிலமும் தீர்மானித்து விட்டது. ஒரு குடும்பத்துக்காக மட்டுமல்ல, மாநிலத்தின் அனைத்து குடும்பங்களுக்காகவும் செயல்படும் அரசையே மக்கள் விரும்புகின்றனர். தமிழ்நாட்டிலே என்டிஏ கூட்டணியால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று, பொது மக்கள் நன்கு அறிந்து உள்ளனர்.விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு... கடந்த 2021ஆம் ஆண்டில், தமிழக மக்கள் திமுகவை ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை, கடமையை நிறைவேற்றாமல், மக்களுக்கு துரோகம் இழைத்தனர். திமுக ஆட்சியில் அனைத்தும் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்திலேயே முடிந்து விடுகிறது. அமைச்சர்கள் மாறலாம், எம்எல்ஏக்கள் மாறலாம், ஆனால் அதிகாரம் ஒரே ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருக்கிறது. விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது திமுக. இன்றைக்கு இந்த மாடல் தான், ஒரே ஒரு குடும்பத்தின் ஏடிஎம் ஆக தமிழ்நாட்டை மாற்றி உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் வேலை வாங்கித் தருவதாகச் கூறி, பணம் பெற்றுப் பெரிய மோசடியில் சிக்கி உள்ளார். வேலைகள் பணத்துக்காக விற்கப்படும்போது நேர்மையான, இளைஞர்களின் கனவு நாசமாக போகிறது. இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது? எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேருகிறதோ, அதேபோல தமிழ்நாட்டின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேர்ந்து, அதன் குடும்பச் சொத்தாக மாறுகிறது. பெண்கள் அச்சமில்லாமல் பயமில்லாமல்...தமிழகத்தின் உணவுப் பாதுகாப்புக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தான் முதுகெலும்பு. தானிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்குவோம் என்பதே திமுகவின் வாக்குறுதியாக இருந்தது. ஆனால் இன்றைக்கு, விவசாயிகள், இந்த சேமிப்பு கிடங்குகள் எங்கே? என்று தேடிக் கொண்டு இருக்கின்றனர். திமுகவை பொறுத்தமட்டிலே அரசியல் என்பது மக்கள் நலனை விட முதன்மையானது. ஊரகப் பகுதி ஏழைகளுக்கான வீடுகள் கட்டி தரும் திட்டத்தை தாமதப்படுத்தி உள்ளனர். மத்திய அரசை, பொது மக்கள் பாராட்டி விடுவார்களே? என்ற பயம் தான் காரணம். திமுக அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் வாடிக்கையாகி விட்டன. ஒரு சிறுமியைக் கூட விட்டு வைக்காத ஒரு திமுக உறுப்பினர், அவர் பற்றிய மோசமான செய்தியை நாம் அனைவருமே பார்த்தோம். உங்களிடத்திலே, நான் வாக்கு அளிக்கிறேன். தமிழகத்தின் பெண்கள், அச்சமில்லாமல் பயமில்லாமல் வாழ்வதை தேஜ கூட்டணி உறுதி செய்யும்.வளமான தமிழகத்தை உருவாக்குவோம்தமிழக வரலாற்றிலே வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் மிகவும் முக்கியமானது. வாக்காளர்கள் முன்பாக இருக்கும் தேர்வு தெளிவாக உள்ளது. ஊழல், வாரிசு அரசியல், பொய்யான வாக்குறுதிகளை நோக்கி ஒரு பாதை. அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம். இங்கு உள்ளவர்களின் குரல் மாநிலம் எங்கும் எதிரொலிக்க வேண்டும். மதுரை மல்லி...மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலைக்கு உயர்த்தி உள்ளோம். இதனால், பல முக்கியமான உலக நகரங்களில் இருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து அந்த நகரங்களுக்கும் நேரடி விமானப் போக்குவரத்து உருவாகும். பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் ஆயிரக்கணக்காக, மதுரைக்கு எளிதாக, வந்து செல்வார்கள். விவசாயிகள், வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க முடியும். விவசாயிகளால் காலையில் பறிக்கப்படும், 'மதுரை மல்லி,' பாரிஸ் நகர், நியூயார்க் நகரின் கடைகளுக்கு அன்று மாலைக்குள் கொண்டு சேர்க்கப்பட்டு விடும்.வெற்றிகரமாக கடந்து செல்வோம் தமிழக மக்களிடத்திலே மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் பற்றி பேச விரும்புகிறேன். இது உலகின் ஒட்டுமொத்த எரிசக்தி வழங்கல் சங்கிலிகளை பாதித்து உள்ளது. யாரும் பயப்பட தேவையில்லை, பீதி அடைய வேண்டாம். வதந்திகளை நம்பாதீர். கொரோனா காலத்திலேயே எப்படிப்பட்ட முதிர்ச்சியை தேசம் பெற்றது என்பதை, 140 கோடி இந்தியர்கள் உலகுக்கு எடுத்துக் காட்டினர். ஒரு தேசம் என்ற வகையிலே, ஒவ்வொரு சூழ்நிலையையும் வெற்றிகரமாக கடந்து செல்வோம் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார். Related Link ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,760