Also Watch
Read this
Posted on: Jan 31, 2026 12:04 PM
By: Manigandan Raja

சுமாராக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட். இதற்கு முன்னதாக, 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி 2026-27ஆம் ஆண்டுக்கான, பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
Sunday ஸ்பெஷல்
ஞாயிறன்று, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில் ஒரு சிறப்பம்சம் என்ன என்றால், தனது சொந்த மற்றும் பிறரின் சாதனைகளை முறியடித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 9ஆவது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே மிக நீண்ட காலம் பணியாற்றிய நிதியமைச்சர், என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்பு வேறு யாரேனும் இந்த சாதனையை படைத்திருக்கிறார்களா? நிர்மலா சீதாராமன் வேறு என்னென்ன சாதனைகளை செய்துள்ளார்... இப்போது, பார்க்கலாம்.
10 முறை பட்ஜெட் தாக்கல்
காங்கிரசிலிருந்து, ஜனதா கட்சி தலைவராக மாறிய மொரார்ஜி தேசாய், இந்த சாதனையை செய்துள்ளார். பல்வேறு பிரதமர்களின் கீழ், நாட்டின் நிதியமைச்சராகப் பணியாற்றிய இவர், தொடர்ச்சியாக அல்லாமல், நாடாளுமன்றத்தில் 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த சாதனையை படைத்துள்ளார். நாட்டின் பட்ஜெட் சாதனையாளர்களில் ப.சிதம்பரம், மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்ஹா, பிரணாப் முகர்ஜி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மன்மோகன்சிங், ப.சிதம்பரம் சாதனை
ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். 4 வெவ்வேறு தலைமையில், 8 ஆண்டுகள் நிதியமைச்சராகப் பணியாற்றினார். நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சராகப் பணியாற்றிய மன்மோகன் சிங், எல்பிஜி அதாவது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் முறையை இந்தியாவிற்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவர். இவர் நாடாளுமன்றத்தில் 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார், 5 ஆண்டுகள் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.
இந்தியாவின் நான்காவது நிதியமைச்சரான, பொருளாதார வல்லுனர் CD தேஷ்முக், இந்தியாவின் மிக நீண்ட காலம் நிதியமைச்சராக பணியாற்றிய சாதனையை கொண்டிருக்கிறார். 1951 மற்றும் 1956க்கு இடையில் பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த தேஷ்முக், ஆறு முழு பட்ஜெட்டுகளையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்திரா காந்திக்கு பிறகு...
இந்தியாவில், இந்திரா காந்திக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்கு எந்தப் பெண்ணும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால், 2019ல் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்று இந்த நிலையை மாற்றினார். அன்றிலிருந்து, அவர் பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒரு வரலாற்று மைல்கல்லாக, மாற்றியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில் மே 31, 2019 அன்று பதவியேற்ற பிறகு, நிர்மலா சீதாராமனின் நிதியமைச்சர் பதவிக்காலம் 6 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் நீடித்தது. ஜூலை 5, 2019 அன்று தனது முதல் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். அடுத்த பட்ஜெட்டிலிருந்தே அவருடைய சாதனைகள் தொடங்கின.
மிக நீண்ட பட்ஜெட் உரை
பிப்ரவரி 1, 2020 அன்று 2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, 2 மணி நேரம் 42 நிமிடங்கள் உரையாற்றி மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்திய சாதனையை அவர் படைத்துள்ளார். நிர்மலா சீதாராமன் சாதனைகளைப் படைப்பதற்கும், சாதனைகளை முறியடிப்பதற்கும் மட்டுமல்லாமல், இதுவரை இருந்த விதிமுறைகளை மாற்றி, புதியவற்றைக் கொண்டு வருவதற்கும் பெயர் பெற்றவர்.
முதல் காகிதமில்லா பட்ஜெட்
2019ஆம் ஆண்டில், காலனித்துவ 'பட்ஜெட் பிரீஃப்கேஸை' சிவப்பு துணியால் சுற்றப்பட்ட பாரம்பரிய இந்திய கணக்கியல் பேரேடு என்று சொல்லப்படுகிற accounting ledger ஆன Bhani Khata ஆக மாற்றினார். 2021ஆம் ஆண்டில், அவர் ஒரு டேப்லெட்டில் முதல் காகிதமில்லா பட்ஜெட்டை வழங்கினார். இந்த நிலையில் 9ஆவது தொடர்ச்சியான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved