Also Watch
Read this
By: Manigandan Raja
ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், 8 ஆயிரத்து 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 15 ஆயிரத்திற்கும் அதிகமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறி உள்ளார். பேச்சு...
சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரை
ஆளுநர் உரை மீதான விவாதத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பதிலுரை அளித்தார். இந்த உரையை அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், திமுக 6ஆவது முறையாக வெற்றி பெற்ற போது ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலையும் இருந்தது. அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்த பொறுப்பை நான் எப்படி செய்ய போகிறேன், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலை தான் எனக்கு இருந்தது. முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறையிலும் மிக மோசமான பின்னடைவை சந்தித்து, மோசமான நிலையை அடைந்து இருந்தது. அதை நாம் சரி செய்து ஆக வேண்டும். அடுத்து நமக்கு மேல இருக்க கூடிய மத்திய அரசு, அது ஒத்துழைக்காத ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த இரண்டு நெருக்கடியை எதிர்க்கொள்வது தான் எனது கவலைக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்
இடியாப்ப சிக்கலான சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம். அதனால் தான் நான் கவலை கொண்டவனாக இருந்தேன். இப்பொழுது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் சொன்னால் நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னுடைய இலக்கை நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழகம் தலை நிமிர்த்துவிட்டது.
தமிழகம் மற்ற மாநிலங்களை விட அதிகம் வளர்ந்துவிட்டது. கோடிக்கணக்கான மக்களின் மனங்களிலும், முகங்களிலும் மகிழ்ச்சி, மன நிறைவை பார்க்கிறேன். நாங்கள் அமைக்க போகிற, திராவிட மாடல் 2.0 ஆட்சி எங்களது சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவுக்கு இருக்கும்.

முதல் கையெழுத்து, பெருமிதம்
என்னுடைய முதல் கையெழுத்தே மகளிர் விடியல் பயண திட்டம் தான். விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ.60,000 வரை சேமித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.29,000 வழங்கி உள்ளோம். அந்த பெண்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என்று பெருமையோடு சொல்கிறார்கள்.
காலை உணவு திட்டம் மூலம் பள்ளி குழந்தைகள் சத்தான உணவை உண்டு வருகின்றனர். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன.
ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், 8 ஆயிரத்து 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன், 15 ஆயிரத்திற்கும் அதிகமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved