ஒரு பக்கம், காங்கிரஸின் ஐவர் குழு திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருப்பது, வருகிற தேர்தலில் காங்கிரஸ் யார் பக்கம் தான் சாயும் என புரியாத புதிராக மாறியிருக்கிறது. காங்கிரஸ் போடும் கணக்கு என்ன? விஜய் உடனான சந்திப்பு உணர்த்துவது என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.ஐவர் குழு, அறிவாலய ரூட்டில் சென்று கொண்டிருக்கும் போதே, காங்கிரஸின் பிரதிநிதி பட்டினப்பாக்கத்தில் விஜய் வீட்டில் முகாமிட்டது தான் தற்போது திமுக கூட்டணி கூடாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ், த.வெ.க. பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக சில நாட்களாகவே பேச்சு நிலவி வருகிறது. ராகுல் காந்திக்கும், விஜய்க்கும் இருக்கும் நட்பு வருகிற தேர்தலில்கூட்டணியாக மாறுமா? என்ற விவாதமும் சூடு பிடித்து வருகிறது.ஆனால், பீஹார் தேர்தலுக்கு பிறகு இந்த விவாதம் வேறு கோணத்தில் திரும்பியது. பீகாரில் படு தோல்வியை சந்தித்த காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருப்பது தான் நல்லது என சில அரசியல் விமர்சகர்கள் கூற, அதற்கேற்ப திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்தது காங்கிரஸ் மேலிடம். இந்த ஐவர் குழு, 2 நாட்களுக்கு முன்பு அறிவாலயம் வந்து முதலமைச்சரை சந்தித்ததோடு, காங்கிரஸ் வெற்றி பெற சாதகமான தொகுதிகள் என 40 தொகுதிகள் கொண்ட பட்டியலை வழங்கியதாக சொல்லப்பட்டது.இந்த சூழலில், எதிர்பாராத திருப்பமாக ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, பட்டினப்பாக்கம் வீட்டில் வைத்து விஜய்யை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.2 நாட்களுக்கு முன்பு ஐவர் குழு அறிவாலயம் சென்று வந்த தடம் மாறுவதற்குள் ராகுல் காந்தியின் பிரதிநிதியாக பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சந்தித்திருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கே குழப்பத்தை கொடுத்துள்ளது.அண்மையில் தான் விஜய்க்கு ஆதரவாக பிரவீன் சக்கரவர்த்தி சமூக வலைதளத்தில் பதிவு போட்டிருந்த நிலையில், தற்போது சந்திப்பும் நிகழ்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.கரூர் துயர சம்பவத்தின் போதும் பிரவீன் சக்கரவர்த்தி மூலம் தான் ராகுல்காந்தி விஜய்யிடம் பேசியதாக கூறப்படும் நிலையில், டெல்லி காங்கிரஸின் தூதுவராக பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சந்தித்திருப்பது பல விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அதாவது, திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது எனக் கூறிக் கொண்டே, விஜய்யை சந்தித்திருப்பதின் மூலம் விஜய்யை வைத்து திமுகவிடம் டிமாண்ட் ஏற்ற காங்கிரஸ் கணக்கு போடுகிறதா? என்ற கேள்வியை எழுப்பிஉள்ளது.என்ன தான், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது வரைக்கும் வலுவாக இருந்தாலும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் செல்வாக்கு பயன்படும் என கணக்கு போட்டு கூட பிரவீன் சக்கரவர்த்தி - விஜய் இடையேயான சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.விஜய் - பிரவீன் சக்கரவர்த்தி இடையேயான சந்திப்பை ஏற்பாடு செய்தது ஆதவ் அர்ஜூனா தான் என்ற தகவலும் கிடைத்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு அடிக்கடி டெல்லிக்கு பறக்கும் ஆதவ் அர்ஜூனா, காங்கிரஸின் முக்கிய தலைவர்களை சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக தான் விஜய் - பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு நிகழ்ந்தது எனவும் கூறப்படுகிறது.சில நாட்களுக்கு முன்பு, ஈரோட்டில் நடந்த திருமணத்தில் வைத்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை, த.வெ.க.வின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் சந்தித்து பேசிய நிலையில், பொள்ளாச்சி திருமண விழாவில் வைத்து த.வெ.க.வுக்கு புது வரவாக வந்திருக்கும் செங்கோட்டையனும், காங்கிரஸின் திருநாவுக்கரசரும் சந்தித்து பேசிக் கொண்டதாக சொல்கிறார்கள்.தற்போது, பிரவீன் சக்கரவர்த்தியும் விஜய்யை சந்தித்து பேசியது, வருகிற தேர்தலில் காங்கிரஸ் அணி மாறும் முடிவுக்கு வந்து விட்டதா? என்ற கேள்விக்கு வழி வகுத்துள்ளது.கடந்த மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்தி வாய்ப்பு கேட்ட நிலையில், திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு காரணமாக சீட் கிடைக்காமல் போனது.இந்த நிலையில், திமுக மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகியும், ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவருமான பிரவீன் சக்கரவர்த்தியின் பட்டினப்பாக்கம் விசிட், திமுக வட்டத்திற்கும் கிலியை கிளப்பியுள்ளது. கேட்ட தொகுதிகளை கொடுக்க வில்லை என்றால் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் தாவி விடலாம் என கணக்கு போட்டு தான், அடுத்தாண்டு தேர்தலுக்கு இந்தாண்டு டிசம்பர் மாதமே ஐவர் குழுவை அமைத்து அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ் என சொல்லப்பட்டது.இது ஒரு பக்கம் இருக்க, தேசிய கட்சியான காங்கிரஸை மாநில கட்சியான திமுக, தேர்தலுக்கு தேர்தல் தோளில் தூக்கி சுமப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுவதுண்டு. அப்படி இருக்கையில், காங்கிரஸ் த.வெ.க.பக்கம் சென்றாலும் பெரிய மாற்றம் இருக்காது என்பது திமுக தரப்பினரின்வாதமாக இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக திமுகவுடன் அங்கமாக இருந்த காங்கிரஸ் த.வெ.க. பக்கம் சென்றால் இத்தனை ஆண்டுகளாக இணை பிரியாமல் இருந்த கூட்டணி பிரிந்து முறிந்து விடும் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.