எத்தனை முறை, எங்கு கூட்டம் போட்டாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இனி, மக்கள் நம்ப மாட்டார்கள் எனக் கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியின் குடும்பத்திற்கு இது தான் கடைசி தேர்தல் என்றும் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய இபிஎஸ், கார்ப்பரேட் கம்பெனியான திமுகவை விரட்டியடிக்க, மக்களே முடிவு செய்து உள்ளதாகவும் கூறினார். என்டிஏ பொதுக்கூட்டம் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசியதாவது;திருச்சியில் 2 நாட்களுக்கு முன்பு, திமுக மாநில மாநாடு நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமர்சித்தார். அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைந்து, தமிழகத்தில் அற்புதமான கூட்டணியை அமைத்து உள்ளது. இது வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில், பல்வேறு வார்த்தை போர்களுக்கு இடையில் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்து உள்ளது. சுமார் 20 நாட்கள் திமுக, காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் நடந்தது. ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் கேட்டு காங்கிரஸ் தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்தது. அத்தனையும் தாண்டி, கெஞ்சி, காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாகி, அக்கட்சியோடு திமுக கூட்டணி வைத்து உள்ளது. தேனீக்களைப் போல...அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணி, அற்புதமான கூட்டணி, பரஸ்பரம் உணர்வோடு நாங்கள் இணைந்து உள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணியின் தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் எறும்பைப் போல, தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் அற்புதமான ஆட்சியை மீண்டும் அமைப்போம். இனி எத்தனை இடங்களில் கூட்டம் போட்டாலும், நாட்டு மக்கள் திமுகவை நம்ப போவதில்லை. கடந்த 2021ல் 525 அறிவிப்புகளை வெளியிட்டது திமுக. இதில் நான்கில் ஒரு பங்கு அறிவிப்பு கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அத்தனையும் பொய், கவர்ச்சியாக பேசி, கவர்ச்சி அறிக்கை விட்டு, ஆனால், சொன்ன அறிவிப்புகளை இதுவரை நடைமுறைப்படுத்தாத அரசு தான் திமுக அரசு. மக்கள் உங்களை அடையாளம் கண்டு கொண்டு விட்டனர். தேர்தல் வந்தால் திமுகவிடம் இருந்து அறிக்கை வரும். தேர்தல் முடிந்தால் அதோடு விட்டு விடுவார்கள், இதுதான் திமுகவின் கொள்கை.பத்து ஆண்டுகால பொற்கால ஆட்சி எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி அதிமுக, நிறைவேற்றிய கூட்டணி எங்கள் கூட்டணி. ஏமாற்றி, ஆட்சிக்கு வந்து மக்களை வாட்டி வதைக்கிற அரசாக திமுக அரசு உள்ளது. தமிழ்நாட்டுக்கும் என்டிஏவுக்கும் தான் போட்டி என ஸ்டாலின் கூறி வருகிறார். நடக்கப் போவது தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும்? யார் வரக் கூடாது? என்று மக்கள் முடிவு செய்ய கூடிய தேர்தல் இது. மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதனால் தான், எங்களைப் பற்றி உங்களால் விமர்சனம் செய்ய முடியவில்லை. 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலத்தில், அற்புதமான ஆட்சியை அதிமுக கொடுத்தது. அது பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டினர். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என்று, அனைத்து தரப்பினருக்குமான அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது.தமிழ்நாடு ஏற்றம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும்திமுக கூட்டணியில் உள்ள அனைவருக்கும் ஒரே கொள்கை என்று ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். திமுக கொள்கையும் காங்கிரஸ் கொள்கையும் ஒன்றா? திமுக கொள்கைகளும் கம்யூனிஸ்ட் கொள்கைகளும் ஒன்றா? திமுக கொள்கையும் விசிகவின் கொள்கையும் ஒன்றா? ஒரே கொள்கை என்றால் ஒரே கட்சியாகி விடலாம், தனித்தனி கட்சி தேவையில்லை. பல்வேறு கொள்கை உள்ள கட்சிகள் சேர்ந்து தான், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், ஒருமித்த கொள்கை கொண்ட கட்சிகள் எல்லாம் இணைந்து உள்ள கூட்டணி தான் கூட்டணி என்று, ஏமாற்றுகிற கட்சி திமுக. வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்பது இயல்பு. திமுகவை அகற்ற வேண்டும், தமிழ்நாடு ஏற்றம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும், கொள்ளை அடிக்கிற கூட்டத்தை அடித்து விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பிரமாதமான கூட்டணியாக எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது.இவ்வாறு இபிஎஸ் உரையாற்றினார். Related Link தமிழ்நாடே ஒரு குடும்பத்தின் ஏடிஎம் - பிரதமர் மோடி